June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடைசி மனிதன்.. ஏழுதியவர் முத்துமணி

1 min read

The last man .. Written by Muthumani

1.7.2021

கடைசியாக வாழ்ந்த ஒரு மனிதனின் 118 ஆவது பிறந்தநாளை நாம் எல்லோரும் இன்று ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். கடைசியாக வாழ்ந்த மனிதனா? யார் அவர்? என்று கேட்டால், காமராசர் என்று சொல்வேன்.
என்ன இது? பெருந்தலைவர், கர்மவீரர், சிக்கல் தீர்த்தவர், கிங் மேக்கர், முன்னாள் முதல்வர், கருப்பு காந்தி என்றெல்லாம் சொல்லாமல் வெறுமனே மனிதன் என்று காமராசரைச் சொல்கிறான் இந்த அசடன் என்று வியக்க வேண்டாம்..
என்னைப் பொருத்தவரை காமராசரை ஒரு தலைவனாகப் பார்ப்பதைவிட முதலமைச்சராகப் பார்ப்பதைவிட சுதந்திரப் போராட்ட வீரராகப் பார்ப்பதைவிட சமூகப் போராளியாக பார்ப்பதைவிட ஒரு மனிதனாகப் பார்ப்பதையே விரும்புறேன்.

கண்ணிரண்டு காலிரண்டு கையிரண்டு என அமையப்பெற்றவர் எல்லோரையும் மனிதர் என்று கருதிவிட முடியாது. இதை நான் சொல்லவில்லை. நம் ஐயன் வள்ளுவன் சொன்னான். ‘உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்..’ மனிதனுக்கு உரிய பண்புகள் யாவும் அகத்தில் அமையப் பெறாமல் புறத்துறுப்பு மட்டும் மனிதன் என்பதை உறுதி செய்ய முடியாது. புறத்து உறுப்புகள் ஒன்றாக அமைந்தால் அதை வைத்துக் கொண்டு இந்த விலங்கு இந்தப் பறவை என்று முடிவு செய்ய இயலும் ஆனால் மனிதனாக உடல் எடுத்தவன் மனிதம் என்ற பண்பு அமையப் பெறாத வரை மனிதனாகக் கருதப்பட மாட்டான்.

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா… என்று அறிவுரையும் மனிதனுக்குத்தான் கூறப்பட்டது.. அப்படியானால் விலங்குகள் விலங்குகளாக பிறந்து விலங்குகளாகவே போய்விடுகின்றன. மனிதன் மட்டும் பிறந்து வாழும் வாழ்க்கையினால் மனிதனுக்கு கீழும் ஆகிறான். மனிதனுக்கு மேலும் போகிறான்.
ஓங்கி உயர்ந்த உடலால் நான் காமராசரை மனிதன் என்று சொல்லவில்லை. அவர் உடல் பலம் மிக்கவர் என்று அவரை உயர்த்திப் பிடிக்கவில்லை. அல்லது அவர் கரிய மேனியைக் கண்டு அவரை தாழ்த்திக் கூறத் தயாராக இல்லை. அவருக்குள்ளே இருந்த மனிதம்… மனிதத்தின் கூறுகள் அன்பு, அருள், ஈவு, இரக்கம் ,நேர்மை இன்னும் எல்லாம் நிறைந்திருந்த அவருடைய உள்ளத்தை வைத்து அவரை ஒரு மனிதனாகப் பார்க்கிறேன்.
காக்காய் உண்டு நரி உண்டு வழிகளுண்டு புலி உண்டு மனிதரில் இத்தனை வகை உண்டு என்கிறார் கவியரசர் கண்ணதாசன். இதற்கு மேலும் எத்தனை வகையாய் மனிதனைப் பிரித்தாலும் அத்தனைபேருக்கும் வெளிப்புறத் தோற்றம் ஒன்றுதான்..

ஐயா நேற்று திருச்சிக்கு பயணம் சென்று வந்தோமே இதோ இதில் கையெழுத்து இடுங்கள் பயணப்படி ஆக 2000 ரூபாய் எடுத்துக் கொள்வதற்கு என்று சொன்னபோது அரசாங்க காரில் போனேன் அரசாங்க விடுதிகள் தயங்கினேன் யாரோ ஒரு தொண்டன் வீட்டில் சோற்றைத் என்றேன் இதில் எங்கிருந்து எனக்கு செலவு வந்தது பயணப்படும் உணவு படியும் எதற்கு அதை கிழித்து என்று சொன்னார்…
இந்த இடத்தில் அவரை நான் ஒரு மனிதராக பார்க்கிறேன்.

மதுரையில் தங்கி இருக்கிறார் முதல்வர் காமராஜர். கல்லூரி மாணவன் ஒருவன் அவரைப் பார்க்க வருகிறான் “ஐயா, அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் பெற்றுக்கொள்வதற்கு ஆங்கிலத்தில் விண்ணப்பத்தை நிரப்பி ஆங்கிலத்தில் கையெழுத்து இடுமாறு கல்லூரியில் கூறுகிறார்கள். நான் தமிழில் கையெழுத்திட்டால் கிடைக்காது என்றும் சொல்கிறார்கள்.” என்று கூற, ” ஏன் நீ ஆங்கிலத்தில் கையெழுத்து போட வேண்டியதுதானே?” என்று கேட்டபோது “தமிழில் எழுதுவதும் கையெழுத்திடுவதும் நான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கை.” என்று சொல்லிவிட்டு உதவி பணம் கிடைக்காது என்று அவநம்பிக்கையோடு சென்ற அந்த மாணவனின் பெயரை ஸ்காலர்ஷிப் பெறும் மாணவர்கள் பட்டியலில் முதல் பெயராக இடம்பெறச் செய்த, கட்சி வேறுபாடு பார்க்காத அந்த நேர்மை வெளிப்பட்ட இடத்தில் அவரை நான் ஒரு மனிதராகப் பார்க்கிறேன்.

“ஐயா இவை மெடிக்கல் காலேஜ் அட்மிஷனுக்காக வந்த விண்ணப்பங்கள் இரண்டு நாட்கள் இவற்றை வைத்து பார்த்துவிட்டு முதலமைச்சர் சிறப்பு ஒதுக்கீட்டுக்காகப் பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வையுங்கள்” என்று சொல்லப்பட்ட போது கொஞ்சம் பொறு என்று படபட என்று விண்ணப்பங்களைப் புரட்டி அவற்றுள் பத்து விண்ணப்பங்களில் கையெழுத்து போட்டு, இந்தா பிடி, என்று சொன்னதும் “எப்படி ஐயா அத்தனையையும் இவ்வளவு விரைவாகப் பார்த்தீர்கள்? எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டபோது “வேறு ஒன்றும் இல்லை. விண்ணப்பங்களில் பெற்றோர் கையெழுத்து என்ற இடத்தில் எவன் எல்லாம் கையெழுத்து போடாமல், கைநாட்டு போட்டிருந்தானோ,அதை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டேன். படிக்காத பாமரனின் மகன் டாக்டராகிவிட்டு போகட்டும்”… என்று சொன்னாரே அந்த இடத்தில் ஒரு மனிதனை பார்த்தேன்.
அன்னை சிவகாமி விருதுநகரில் காலமானார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. காமராசருக்குத் தலை முடி எடுக்கும் சடங்கு நடந்து முடிந்தது. தலைமுடியை எடுத்த தொழிலாளி, தன் கைகளைக் காமராசரை நோக்கி நீட்டுகிறார். சாஸ்திரப்படி, தாயை இழந்த மகன் அந்தத் தொழிலாளிக்குக் கையில் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரிடம் பத்து பைசா கூட இல்லை. “இந்த நாட்டை பத்து வருஷம் ஆட்சி பண்ணி இருக்கியே ஐயா. உன் கையில் பத்து ரூபா காசு இல்லையா? உன் கையால் பணம் வாங்கி விடலாம் என்று நினைத்தேன.அது நடக்கவில்லையே!” என்று அந்தத் தொழிலாளி தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். அப்போது அந்த இடத்தில் இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் பணம் கொடுத்து சமாளித்தார், என்று படிக்கிற இடத்தில் ஒரு மனிதரைப் பார்க்கிறேன்.
விபத்து ஒன்றை ஏற்படுத்தி சிறையில் இருந்த தன் தங்கையின் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன் அந்த துறையை சார்ந்த அமைச்சரைக் கண்டித்து அவன் என்ன பெரிய தியாகியா? சுதந்திரத்துக்காகப் போராடி ஜெயிலுக்கு வந்திருக்கிறானா? முதல்வகுப்பு கொடுத்திருக்கிறாய்?” என்று, தன் தங்கை மகனைச் சிறையில் உரிய இடத்திற்கு மாற்றம் செய்த நேர்மையில் ஒரு மனிதனைப் பார்க்கின்றேன்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்ற வள்ளுவன் வாக்கு காமராசரை பொருத்தவரையில் அதற்கு அவர் இலக்கியமாக வாழ்ந்தவர். பிறர்க்கு வரும் துன்பத்தைத தன் துன்பமாக எண்ணிப் பார்க்கின்ற இதயம் எவனுக்கு இருக்கிறதோ அவன்தான் உயிர் வாழும் மனிதன். மற்றவன் எல்லாம் செத்த சவம் என்பது வள்ளுவர் சொன்னது.
சென்னையில் அரசு பொருட்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திடீரென்று உள்ளே வந்தார் முதலமைச்சர். அவரைப் பார்த்த கிராமத்து மக்கள் சிலர் அவரோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள். உடனடியாக அங்கிருந்த தற்காலிக ஸ்டூடியோவில் குழு போட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அருகிலிருந்தவர் கேட்டார் பொதுவாக போட்டோ பிடிப்பது உங்களுக்குப் பிடிக்காது. இன்னைக்கு என்ன அப்படி ஒரு ஆசை? போட்டோ எடுத்து கொண்டீர்கள்.”. என்று கேட்டபோது,” அது வேற ஒண்ணும் இல்ல. பொருட்காட்சியில் எல்லா இடங்களிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த போட்டோ படிப்பவனுக்கு யாருமே இன்றைக்கு வரவில்லை. சும்மாவே உட்கார்ந்து இருந்தான். அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்? என்று யோசித்துக்கொண்டே வந்தேன். அப்போதுதான் இவர்கள் போட்டோ எடுக்க கேட்டார்கள். சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டால் என்னோடு இருக்கிற போட்டோவைப் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் எல்லோரும் வாங்குவார்கள் அல்லவா? இந்தப் போட்டோக் காரனுக்கு பிழைப்பு நடக்கும். என்று நினைத்து போட்டோ எடுத்தேன்”. என்று சொன்ன இடத்தில் ஒத்தது அறிந்த உயிர் வாழ்ந்த ஒரு மனிதனைப் பார்க்கிறேன்.

திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சியைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. யாருமில்லாத ஒரு அறை. அந்த அறைக்குள் நுழையும் ஒரு மனிதர் அங்கு இருக்கும் காசு சேர்த்து வைக்கும் உண்டியல் பெட்டியைப பார்க்கிறார். சுற்றுமுற்றும் பார்க்க யாரும் இல்லை. பணத்தின் மீது ஆசை வருகிறது. அந்த உண்டியலை அப்படியே திருடி விட ஆசைப்படுகிறார். இரண்டு கைகளாலும் எடுக்கிறார். உண்டியலைக் குலுக்கிப் பார்க்கிறார். உள்ளே காசு சத்தம். சிரித்துக்கொண்டு அதைத் தூக்கியவர் தற்செயலாக மேலே நிமிர்ந்து பார்க்கிறார். அங்கே புகைப்படத்தில் காமராஜர். காமராசரின் புகைப்படத்தைப் பார்த்த உடன் எடுத்த உண்டியலை மீண்டும் அதே இடத்தில் அப்படியே வைத்துவிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியில் போய் விடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது… காமராஜரின் படம் தொங்குகிற இடத்தில் கூட மனசாட்சிக்கு விரோதமாக ஒரு மனிதனால் எந்தத் தவறும் செய்ய முடியாது என்று சித்தரித்துக் காட்டிய அந்த காட்சியையப் பார்த்த இடத்தில் காமராஜரை ஒரு உயர்ந்த மனிதனாக நான் பார்க்க நேர்ந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.