வேதனை தரும் மணிமண்டபம்/ கடையம் பாலன்
1 min read
Painful Manimandapam / Kadayam Balan
21.7.2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி பிறந்தார். 2001ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி இம்மண்ணுலகை விட்டு ஆவியாய் மறைந்தார்.
சிவாஜி கணேசன் நடிப்பு என்று வந்துவி்ட்டால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார். தன்தாய் இறந்த ஒன்றிரண்டு நாளில் வசந்தமாளிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதுவும் மயக்கமென்ன பாடல் காட்சியில் நடித்தார். வெள்ளை ரோஜா படத்தில் அவர் பாதிரியார் வேடத்தில் சவப்பெட்டியில் இறந்து கிடப்பது போன்ற காட்சி வரும். இது சிவாஜிகணேசனின் பிறந்த நாளில் படமாக்கப்பட்டது. இப்படி நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்.
சிவாஜி கணேசன் இருக்கும்போது, அவர் அடிக்கடி சொல்வார். நடித்துக் கொண்டு இருக்கும்போதே இறக்க வேண்டும் என்று. நடிப்பின் மீது அவர் வைத்திருந்த ஆத்மார்த்தமான ஈடுபாடு காரணமாக இப்படி சொன்னார். ஆனால் அவரது இந்த எண்ணம் ஈடேறவில்லை. அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போனதற்கு அவர் ரசிகர்கள் மீது கொண்ட பாசம்தான் காரணம்.
சிவாஜி கணேசன் தன் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். ரசிகர்களை பிள்ளைகள் என்றே கூறுவார். அவர் எத்தனையோ ரசிகர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். ஆனால் அதை பற்றி அவர் வெளியே சொல்வதே கிடையாது. அவரைப் பற்றி அவரது குடும்பத்தாரை விட ரசிகர்களுக்குத்தான் அதிகம் தெரியும்.
சிவாஜி கணேசன் எப்படி ரசிகர்கள் மீது பற்று வைத்திருந்தாரோ அதேபோல்தான் ரசிகர்களும் அவர்மீது பாசம் வைத்திருந்தார்கள்.
சிவாஜி கணேசனின் மரணம் அவர் எண்ணியபடி நடித்து இருந்தால் அவரது கோடாணுகோடி ரசிகர்களால் தாங்கி கொண்டிருக்க முடியுமா? அதனால்தான் அப்படி அகால மரணத்தை தழுவ அவரது உள்மனது இறைவனிடம் வேண்டவில்லை போலும்.
சரி.. இப்போது எனக்கு இருக்கும் ஆதங்கம்…
நடிகர் திலகத்திற்கு சிலை கடற்கரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சிலை அகற்றப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. அந்த சிலையை கடற்கரையில் வைத்து இருக்கலாம்.
இப்போது அவரது சிலை அடையாறு சத்தியா ஸ்டுடியோ எதிரே மணிமண்டபம் கட்டப்பட்டு அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அந்த விஸ்வ ரூப சிலை அங்கே வைக்கப்பட வேண்டியது அல்ல. அது சென்னை கடற்கரையில் வைக்கப்பட வேண்டிய சிலை. அதற்கு இந்த அரசு முயலும் என்று எதிர்பார்க்கிறோம்.
மணி மண்டபத்தில் சிறிய அளவில் ஒரு சிலை வைக்கலாம். அதோடு அங்கே இன்னும் நிறைய அம்சங்கள் இடம்பெற வேண்டும்.
அந்த மணிமண்டபத்தில் சிவாஜிகணேசனை பற்றிய தகவல்கள் இல்லவே இல்லை. அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒரு வரலாறு. அவைகளை பற்றிய விவரம் அங்கே இல்லை. அவர் நாட்டுக்காக செய்த உதவிகள் எதுவும் இடம்பெறவில்லை. இது வேதனையிலும் வேதனை. அவர் இறக்கும்போது கூட இப்படி கவலை படவில்லை. இப்போது மணிமண்டபத்தை பார்த்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
ஆம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிமண்டபத்தை ஆர்வமாக பார்க்கச் சென்று.. கவலையுடன் திரும்பினேன்.
சில வருடங்களுக்கு முன்பு ராமேசுவரம் சென்றேன். அங்கே அப்துல்கலாம் நினைவிடத்தைப் பார்த்தேன். மத்திய அரசு அப்துல்கலாமுக்கு சிறப்பாக நன்றி கடன் செலுத்தி உள்ளது. அவரது நினைவிடம் ஒரு சுற்றுலாத்தலம் போல் வடிவமைத்து இருக்கிறார்கள். அதாவது பூங்கா மட்டுமல்ல. அவரது விதவிதமான சிலைகளை வைத்து இருக்கிறார்கள். அது பிரகாரத்துடன் அமைந்த கோவில் போல் வடிவமைத்து உள்ளனர்.
அதேபோல் சிவாஜி மணிமண்டத்தை அமைத்து இருக்க வேண்டும். அங்கே மைய மண்டபத்தை சுற்றி பிரகாரம் அமைத்து அதில் சிவாஜி போட்ட விதவிதமான வேடத்தின் மெழுகு சிலைகளை அமைக்க வேண்டும். அந்த வேட சிலைக்கான கதை பின்னணியை அங்கே குறித்து வைக்க வேண்டும். ஆனால் அதற்கு போதுமான இடம் அது அல்ல. அதற்காக மாடிகள் அமைத்து சிலைகள் வைக்கலாம்,.
இதற்கு அரசு முழு பணத்தையும் செலவு செய்யும் என்பது இயலாத காரியம். உச்ச நடிகர்கள் நன்கொடையாக வெவ்வேறு சிலைகள் அமைத்து கொடுக்கலாம். அதில் அவர்கள் பெயரையும் குறித்து வைக்கலாம். ஆனால் இதை எல்லாம் இப்போதுள்ள நடிகர்கள் செய்வார்களா என்பது கேள்விக் குறிதான். வசதி படைத்த ரசிகர்கள் வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய முயலாம்.
மினி திரையரங்கு அமைத்து அவரது படங்களை ஒளிபரப்பலாம். இன்னும் எத்தனையோ…. வைக்கலாம். உள்ளே சென்று திரும்பும் போது நாம் சாதனை செய்தது போன்ற உணர்வை பெறவேண்டும்.
நிறைவேறுமா? காலம் கனிமா… காத்திருக்கிறேன்…
-கடையம் பாலன்