June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள்

1 min read

Medals won by India at the Tokyo Olympics

7.8.2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகமான வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் இந்த ஆண்டு இதற்கு முன்பைவிட அதிக அளவில் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
டோக்கியோ ஒலி்ம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா(வயது 23) பங்கேற்றார். இறுதி போட்டியில் இவர் வென்று தங்கம் பெற்றார்.
23 வயதான நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் இதற்கு முன்பு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இப்போது முதன் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

7 பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது. அதாவது 66-வது இடத்தில் இருந்து 46வது இடத்தற்கு வந்துள்ளது.

இந்தியா சார்பில் இதுவரை நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில் தங்கம்), பஜ்ரங் புனியா (மல்யுத்தத்தில் வெண்கலம்), மீராபாய் சானு (பளுதூக்குதலில் வெள்ளி) பி.வி.சிந்து (பேட்மிண்டனில் வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டையில் வெண்கலம்), ஆடவர் ஹாக்கி அணி (வெண்கலம்), ரவிக்குமார் தாஹியா (மல்யுத்தத்தில் வெள்ளி) என 7 பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தங்க மகன்

ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு தனி நபர் கூட தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி எழுதி ‘தங்க மகனாக’ உருவெடுத்திருக்கிறார், நீரஜ் சோப்ரா.

கடந்த கால சாதனை

கடந்த 1900ம் ஆண்டு இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் வெள்ளி வென்றவரின் பெயர் நார்மன் பிரிட்சார்ட். ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையைப் படைத்திருந்தார்.

அதன் பிறகு நாம் ஆடவர் ஹாக்கி போட்டியில் 8 முறை தங்கம் வென்றுள்ளோம். கடைசியாக நமக்கு கிடைத்த தனி நபர் தங்கப் பதக்கமானது 2008 ஆம் ஆண்டு வந்தது. அப்போது சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா. அதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் வென்றுள்ளது இந்தியா.

தனிநபர் பெற்ற பதக்கங்கள்

2020 – தங்கம் – ஈட்டி எறிதல் – நீரஜ் சோப்ரா

2008 – தங்கம் – குறி பார்த்துச் சுடுதல் – அபினவ் பிந்திரா

2008 – வெண்கலம் – மற்போர் – சுசீல் குமார்

2008 – வெண்கலம் -குத்துச்சண்டை – விஜேந்தர் குமார்

2004 – வெள்ளி – குறி பார்த்துச் சுடுதல் – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

2000 – வெண்கலம் – பாரம்தூக்கல் – கர்னம் மல்லேஸ்வரி

1996 – வெண்கலம் – டென்னிஸ் – லியாண்டர் பயஸ்

1952 – வெண்கலம் – மற்போர் – காசாபா தாதாசாகேப் சாதவ்

நீரஜ் சோப்ராவின் தந்தை

நீரஜ் சோப்ரா பற்றி அவரது தந்தை சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களுடைய நம்பிக்கைகளை அவர் நிறைவேற்றியுள்ளார். எங்களது கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாத சூழலில் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டார்” என உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.

அரியானாவின் பானிபட் நகரில் நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் ஈட்டி எறிதல் இறுதி போட்டியை கண்டு, களித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஜனாதிபதி வாழ்த்து

நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈட்டி எறிதலில் பெற்ற உங்களுடைய தங்க பதக்கம், தடைகளை உடைத்து வரலாறு படைத்து உள்ளது. உங்களுடைய முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நாட்டுக்கு தங்க பதக்கம் வென்று தந்துள்ளீர்கள். உங்களுடைய தடம் இளைஞர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும். இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகள்” என்று தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது. நீரஜ் சோப்ரா இன்று நடத்திய சாதனை எந்நாளும் நினைவுகூரப்படும். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடி தனது திறனைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 120 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்று நீரஜ் சோப்ராவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறு கோடி இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையுணர்வை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.