பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்; ஈட்டி எறிதலில் சுமித் உலக சாதனை
1 min read2nd gold for India in Paralympics; Sumit world record in javelin throw
30.8.2021
பாராலிம்பிக்கில் எப்-64 பிரிவு ஈட்டி எறிதலில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் வென்றார்.
ஈட்டி எறிதல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றார். இதேபோல், எப்-64 பிரிவு ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் பங்கேற்றார்.
அவர், 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் வென்று சாதித்துள்ளார். ஏற்கனவே, எப்-46 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 25வது இடத்திற்கு முன்னேறியது.
பிரதமர் வாழ்த்து
தங்கம் வென்ற சுமித் அண்டிலிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து: நமது தடகள வீரர்கள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறார்கள். பாராலிம்பிக்கில் சுமித் அண்டிலின் மகத்தான சாதனையால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதற்கு சுமித்திற்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.