17 மாதத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்குகள் நேரடி விசாரணை
1 min readThe first cases will be heard live tomorrow in the Supreme Court after 17 months
31.8.2021
கொரோனா பாதிப்பு குறைந்ததால், உச்ச நீதிமன்றத்தில் 17 மாதங் களுக்குப் பிறகு குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நாளை முதல் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் நேரடியாக விசாரிக்கலாம் என பரிந்துரை வழங்கியது.
நாளை முதல்..
இதையடுத்து, செப்டம்பர் 1-ந் தேதி (நாளை) முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். அதேநேரம் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்க விரும்பும் வழக்கறிஞர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கட்டாயம்பின்பற்ற வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு அறையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக நடத்த அனுமதி இல்லை. காணொலி மூலம்தான் விசாரணை நடைபெறும். ஒருவேளை நேரடியாக ஆஜராக விரும்பினால், ஒரு தரப்புக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது அவருடைய பதில் ஆள், ஒரு வாதாடும் வழக்கறிஞர் மற்றும் ஒரு இளம் வழக்கறிஞர், ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.