அசாம் தேசிய பூங்காவில் இருந்து ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்
1 min read
Rajiv Gandhi’s name removed from Assam National Park
2.9.2021
அசாம் மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை மாற்ற மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய பூங்கா
அசாம் மாநிலத்தில் ஓரங்க் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இந்த தேசிய பூங்கா ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூங்காவின் பெயரை ஓரங்க் தேசிய பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்ய நேற்று மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் பெங்கால் புலிகள் அதிக அளவில் உள்ளன.
ஏற்கனவே, மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரை மாற்றிய நிலையில், தற்போது அசாம் அரசு பூங்காவின் பெயரில் இருந்து ராஜீவ் காந்தி பெயரை நீக்கியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. ஆதிவாசி மற்றும் தேயிலை பழங்குடியின சமூகத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு மந்திரிசபையில் எடுக்கப்பட்டது’’ என அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விலங்குகள் சரணாலயம்
இந்த பூங்கா தர்ராங்கின் பிரம்மபுத்திரா நதியின் வடக்குக்கரையோரம் அமைந்துள்ளது. 79.28 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. 1985-ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயம் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1999-ம் ஆண்டு தேசிய பூங்காவானது.
1992-ம் ஆண்டு ராஜீவ்காந்தி தேசிய பூங்கா என்ற பெயர் ஓரங்க் வனவிலங்கு சரணாலயம் எனப் மாற்றப்பட்டது. அதன்பின் 2001-ம் ஆண்டு தருண் கோகாய் அரசு மீண்டும் ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.