தலைவர் பதிவிக்கு மொய்க்கும் காங்கிரஸ் தலைவர்கள்
1 min read
Congress leaders flocking to the leader post
5.9.2021
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கும், கோஷ்டித் தலைவர்கள் சிலர் மீது மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது. மாநிலத்தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை தான் நீடிக்க முடியும். அந்த வகையில் கே.எஸ்.அழகிரியின் பதவியை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரசார் டெல்லி மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.
கே.எஸ்.அழகிரி தலைமையில் சந்தித்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். இரு தேர்தலில் கே.எஸ்.அழகிரியின் அரசியல் வியூகம், காங்கிரஸ் கட்சியினருக்கு கை கொடுத்துள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியூகம்
கட்சியினருக்கு தொடர்ந்து பணிகளை கொடுத்து, கட்சியை உயிரோட்டமாக வைத்து, கட்சி ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தலில் மேயர், துணை மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளை இருபது சதவீதம் வரை தி.மு.க., கூட்டணியில் கைப்பற்ற வேண்டும் என்ற வியூகத்தை கே.எஸ்.அழகிரி, வகுத்துள்ளார்.
இன்றும் நாளையும்(6, 7-ந் தேதிகளில்) விழுப்புரம் மாவட்ட செயல்வீர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.அதை தொடர்ந்து நாகப்பட்டினம், மத்திய சென்னை மேற்கு உள்ளிட்ட மாவட்ட வாரியாக, செயல்வீரர்கள் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கட்சியில் சில மாவட்டங்களில் வட்டார, சர்கிள், நகர கமிட்டிகளில் நி்ர்வாகிகள் முழுமையாக நியமிக்கவில்லை. வரும் 15ம்தேதிக்குள் காலி இடங்களை நிரப்ப வேண்டும் என, கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.
புதிய மாவட்ட தலைவர்கள், தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் நியமன பட்டியலும் வெளியிட்டு வருகின்றனர்.
கோஷ்டி தலைவர்கள்
இதற்கிடையில், தலைவர் பதவியை கைப்பற்ற, பெண் எம்.பி. உட்பட சில எம்.பி.க்கள் மற்றும் கோஷ்டித் தலைவர்களும் கடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், வரும் மார்ச் மாதம் வரை தலைவர் பதவி கேட்டு டெல்லியில் யாரும் லாபி செய்ய வேண்டாம் என்றும் கே.எஸ்.அழகிரி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் சந்திக்கப்படும் என, மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், திட்டவட்டமாக கூறிவிட்டார். தலைவர் பதவிக்காக யாரும் டெல்லி வரவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.