ஆந்திரா அணையில் தண்ணீர் திறப்பால் பாலாற்றில் வெள்ளம்
1 min read
Andhra Pradesh dam floods due to opening of water in dam
5.9.2021-
ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணை நிரம்பி வழிவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளம்
ஆந்திரா மாநிலம், சித்துார் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கலவகுண்டா அணை நிரம்பி வழிவதால் வினாடிக்கு 4,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பொன்னை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கலவகுண்ணா, பொன்னை அணைக்கட்டு தண்ணீர் வெளியேறி பொன்னையாற்று வழியாக ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் கலப்பதால் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது.
16 கிராமங்கள்
இதனால் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மருதம்பக்கம், ஏகாம்பரநல்லுார், கொண்ட குப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லுார், சாத்தம்பாக்கம், விசாரம், ஆற்காடு, சக்கரமல்லுார், புதுப்பாடி ஆகிய 16 கிரா மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுத்து மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வருவாய்த்துறை மூலம் சக்கரமல்லுார் உள்ளிட்ட 16 கிராமங்களிலும் பணியாளர் மூலம் தண்டோரா போட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.