ஸ்மார்ட் போன் வந்த பிறகு நமது தூக்கம் போச்சு…
1 min read
செல்போன்களால் தூக்கம் கெட்டுப் போகிறது.
தூக்கம் கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம்10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா.?
கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனித்து இருக் கின்றீர்களா ?
இரவு 8 மணிக்கு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து,பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால்,9 மணிக்குள் உறங்கிப் போவோம்.
அது ஒரு காலம் 9 மணி தூக்கம் என்பது,10 மணியாகி,நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரை கூட விழித்திருக்கிறார்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல்
இப்படி ஆவது என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல், தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் விளைவு தான்,இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.
இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடியானத் தொடர்பு உண்டு.
தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் புற்றுநோய், இதயநோய்,உடல் பருமன்
பக்கவாத நோய், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.
நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப் போகிறது? நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?
இதற்கு நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள் தான் காரணம் என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல. உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப் போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு அதிக வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.
இரவுச் சந்தையில் தான், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு `கோடிகள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது,முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.
இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட் போனில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் மாய உலகத்துக்குச் சென்று விட்டால், அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசி விட்டே உறங்கச் செல்வார்கள்.
நேற்றைய வீட்டுத் திண்ணை, இன்றைய வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர் களுடன் கூட, வீட்டில் இருந்து கொண்டே சமூக வலை தளங்களின் வழியே தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள். இது உண்மை. தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்’ சொல்லி விட்டுத் தான் படுக்கைக்கே செல்கிறார்கள். இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்?
வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா? என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை கம்பல்சிவ் பிஹேவியர்’எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும்,`கண்டிஷனல் இன்சோம்னியா’ எனும் தூக்கமின்மை நோய் என்றும் இன்றைய மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா?தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டைஆன் செய்து, வாட்ஸ்அப்பில்
ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா ?எனப் பார்ப்பது தான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலை தளங்களுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை உணர வேண்டிய அவசியமான தருணம் இது …,
இந்த விஷயத்தை நாம் முறை படுத்திக் கொள்ள வேண்டும்.