சென்னை ஈசிஆர் சாலையில் போர் விமானம் தரையிறங்கும் வசதி
1 min readFighter aircraft landing facility at Chennai ECR Road
9.9.2021
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
போர் விமானம்
ராஜஸ்தானின் பார்மரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவு, தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறங்கும் வகையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
விமானங்கள் தரையிறங்கும் நிகழ்ச்சியை, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்துப் பேசினார்கள். இதில் நிதின் கட்கரி பேசியதாவது:-
முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும்.
சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், அரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் போர் விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைவர் ஆர் எஸ் பதௌரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்