“மங்கள்யான்’ விண்கலம் 7 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்து உள்ளது
1 min read
The Mangalyan spacecraft has completed 7 years of voyage
27.9.2021
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் ஏழு ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்து எட்டாவது ஆண்டில் நுழைந்து உள்ளது.
மங்கள்யான்
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ சார்பில் 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5-ந் தேதி, மங்கள்யான் என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது, 2014ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது.
இந்த விண்கலம் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கும் என முதலில் கணிக்கப்பட்டிருந்தது. எனினும், சுற்றுவட்டப் பாதையில் ஏழு ஆண்டுகள் தன் பயணத்தை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டில் மங்கள்யான் விண்கலம் அடி எடுத்து வைத்துள்ளது.
செயல்திறன்
இது குறித்து, மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அதன் செயல்திறன் நன்றாகவே உள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்கு இந்த விண்கலம் நன்றாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.இந்த விண்கலம் வாயிலாக செவ்வாய் கிரகம் குறித்த பல தரவுகளை இஸ்ரோ சேகரித்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ள இது உதவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மங்கள்யான் திட்டக் குழுவை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான ராதாகிருஷ்ணன் கூறுகையில், “உண்மையில், எனக்கு திருப்திகரமான உணர்வை அளித்துள்ளது,” என, நெகிழ்ச்சியுடன் கூறினார்.