பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா; பெண் மந்திரியும் விலகல்
1 min readNavjot Singh Sidhu resigns as Punjab Congress president; The dismissal of the female minister
28.9.2021
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா செய்தார்.
சி்த்து ராஜினாமா
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட நிலையில் அவருடனான மோதல் காரணமாக தனது முதல் மந்திரி பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து முதல் மந்திரியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரண்ஜீத் சன்னி முதல் மந்திரியாக பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து இன்று ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு மனிதன் எப்போது சமரசங்கள் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
எனவே, பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன்.
இவ்வாறு அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது சித்துவும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெண் மந்திரி
இந்த பரபரப்பான சூழலில், பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து ரஸியா சுல்தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக ரஸியா சுல்தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் எனவும் ரஸியா சுல்தான் தெரிவித்துள்ளார்.