ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை
1 min readFormer minister Indira Kumari jailed for 5 years for corruption
29.9.2021
ஊழல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழக்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்திரகுமாரி
கடந்த, 1991 – 1996ல், தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர், இந்திராகுமாரி. அப்போது, வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இரண்டு அறக்கட்டளைகளை, அவரது கணவர் பாபு தொடங்கி உள்ளார். அந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும், 15.45 லட்சம் ரூபாயை, சமூக நலத்துறை ஒதுக்கியுள்ளது. அந்த தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், சமூக நலத்துறைக்கு எந்த நோட்டீசும் கொடுக்காமல், இரண்டு அறக்கட்டளைகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை.
வழக்கு
இது தொடர்பாக, சமூக நலத்துறை செயலர் லட்சுமி பிரனேஷ் அளித்த புகாரில், இந்திராகுமாரி, அவரது கணவர் உட்பட, ஐந்து பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
5 ஆண்டு சிறை
இந்த வழக்கில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்திராகுமாரி, பாபுவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளியான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபாகரன் என்பவர் இறந்த நிலையில், வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்பட்டார்.
இந்திரகுமாரி தற்போது தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சுவலி
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.