சீக்கியர்களின் புனித நூலை அவமதித்த வாலிபர் அடித்துக் கொலை
1 min read
Beaten to death for insulting Sikh scripture
15.10.2021
சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது கையை வெட்டி பிணத்தை விவசாயிகள் போராட்ட இடத்திற்கு அருகே தொடங்கவிட்டனர்.
வாலிபர் கொலை
ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் முக்கிய பகுதிக்கு அருகில் இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்ட ஒரு வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் மேலும் அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டத் தளம் அருகே உள்ள தடுப்பு வேலியில் தொங்கவிடப்பட்டு இருந்தது.
விவசாயிகள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் வாலிபரை கொன்றதாக சீக்கியக் குழுவான நிஹாங்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சீக்கிய புனித நூல்
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்த வாலிபரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் வாலிபரை அடித்து கொன்று, உடலை போலீஸ் தடுப்பில் தொங்கவிட்டதாகவும் பின்னர் மணிக்கட்டை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
சோனிபட் போலீசார் வாலிபர் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.