பஞ்சாயத்தை திணறவைத்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram in Pachayath / Story by Thabasukumar
17.10.2021
கண்ணாயிரத்தை தேடி வந்த பெண் கண்ணாயிரம் தன் கணவர் என்றும் நான்கு வயது சிறுவன் அவர் மகன் என்றும்கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாயிரம் மனைவி கோபம் அடைந்து தன் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறினாள். பஞ்சாயத்து பேச அவளது தந்தை அரிவாள் ஒன்றை கையில் ஏந்தி மகளுடன் காரில் கண்ணாயிரத்தை தேடி வந்து கொண்டிருந்தார். ஊர் மக்கள் இந்த பிரச்சினை எப்படி தீரும் என்று காத்திருந்தனர். பிரச்சினையின் வேகம் தெரியாமல் கண்ணாயிரம் சிறுவன் சுரேசுக்கு இட்லி வாங்கி கொடுத்து விட்டு மெதுவாக வீட்டுக்கு நடந்துவந்துகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கண்ணாயிரம் மனைவி தனது தந்தையுடன் காரில்வந்து இறஙகினரர். ஊர்மக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். கண்ணாயிரம் மனைவியின் தந்தை கையில் அரிவாளுடன் காரைவிட்டு இறங்கி நடந்தார். அவரை பார்த்ததும் பெண்கள் அதிர்ச்சியுடன் என்ன இவரு அரிவாளுடன் வந்திருக்கார் என்றனர். முதியவர் உடனே அருவா பஞ்சாயத்து அமாவாசை ன்னா சும்மாவா. இன்னைக்கு கண்ணாயிரம் பாடு கஷ்டம்தான் என்று கூறினார்.
கண்ணாயிரம் மனைவி வீட்டை திறந்து ஒரு மேசை, ஒரு நாற்காலியை எடுத்துவெளியேபோட்டார். ஒருசெம்பில் தண்ணீர் கொண்டு வைத்தார். கண்ணாயிரத்தின் மாமனார் அந்த நாற்காலியில் அமர்ந்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர் என்ன நடக்குது என்று பார்த்தபடி நின்றார். அவனிடம் கண்ணாயிரம் மனைவி, தம்பி கடைக்குபோய் வெற்றிலை, பாக்கு, புகையிலை, இரண்டு சோடாவாங்கிட்டு உடனேவா என்று பணத்தைகொடுத்து அனுப்பினார். அவன் உடனடியாக கடைக்குச் சென்று சோடா மற்றும் வெற்றிலை, பாக்கு வாங்கிக்கொண்டு வேகமாக அங்கு வந்தான்.
ஊர்மக்கள் பஞ்சாயத்துமுன் திரண்டனர். அருவா பஞ்சாயத்து அமாவாசை தன் விசாரணையை தொடங்கினார். தன் மகளை பார்த்து என்னம்மா உன் புகார் என்று கேட்டார். உடனே அவர், என் கணவர் கண்ணாயிரம் நான் இருக்கும்போது இரண்டாவதாக ஒருபெண்ணை திருமணம் செய்திருக்கார். அவங்களுக்கு ஒருமகன் இருக்கிறான். கண்ணாயிரம் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இதுதான் என் புகார் என்றார்.
உடனே அருவா பஞ்சாயத்து அமாவாசை, கண்ணாயிரத்தை எங்கே, கண்ணாயிரத்தை கூப்புடுங்கய்யா என்று கத்தினார்.
உடனே சைக்கிள்கடை வாலிபர் அங்கே நடந்துவந்து கொண்டிருந்த கண்ணாயிரத்தைபார்த்து, கண்ணாயிரம், கண்ணாயிரம் என்று இரண்டு முறை கூப்பிட்டான். அதை கேட்டதும் கண்ணாயிரம் இதோ வந்துட்டேன் என்று கூறியபடி சிறுவன் சுரேசை அழைத்துகொண்டு அங்கு வந்தார்.
அருவா பஞ்சாயத்து அமாவாசையை பார்த்து மாமா சவுக்கியமா என்று கேட்டார். அதை கேட்டதும் அவர் கடுப்பாகி, இது பஞ்சாயத்து, இங்கே மாமன், மச்சான் என்கிற பந்த பாசத்துக்கெல்லாம் இடம் கிடையாது. உன்மீது புகார் வந்திருக்கு. முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் பண்ணுனியா என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் நான் எங்கே இரண்டாவது திருமணம் பண்ணுனேன் என்று திருப்பிகேட்டார்.
இதைக்கேட்டு கோபம் அடைந்த அவர் அப்பம் முதலிலே அந்தபெண்ணை கலியாணம் பண்ணிட்டியா, அதை மறைச்சிதான் என் பெண்ணை இரண்டாவது கட்டினியா என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே இரண்டாவதாக நான் யாரையும் கலியாணம் பண்ணிக்கல என்று சொன்னார். அப்படின்னா இந்த பொண்ணு யாரு என்று கவுசல்யாவை காட்டி கண்ணாயிரத்திடம் கேட்டார். அதற்கு அவர் இது கண்ணாயிரம் பொண்டாட்டி என்று சொன்னார். அவர் ஆத்திரத்தில் என்னடா குழப்புற என்று அரிவாளை காட்டிமிரட்டினார்.
கண்ணாயிரம் மனைவி அப்பா ஒண்ணு என்று நியாபகபடுத்தினார். அருவா அம்மாவாசை உடனே புரியுதம்மா. இன்னும் ஒருதரம் பயன்படுத்திக்கலாம். வரம் நினைவு இருக்கு என்றார்.
கண்ணாயிரத்தை பார்த்து அவர் இரண்டாவதாக திருமணம் பண்ணலைன்னு சொல்லுற அப்புறம் எப்படி இந்தபொண்ணுக்கு கணவர் கண்ணாயிரமுன்னு சொல்லுற என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம், அட என்னங்க கண்ணாயிரம் மனைவியை கண்ணாயிரம் மனைவின்னுதான் சொல்வாங்க, மாத்தியா சொல்லமுடியும் என்று கேட்டார். அருவா அமாவாசை கண்ணாயிரத்தை கோபத்துடன் பார்த்து ஏய் கலியாணம் பண்ணாம குடும்பமா என்று கேட்டார்.
உடனே கவுசல்யா குறுக்கிட்டு அப்படி சொல்லாதீங்க. நான் சொல்லுறதை கேளுங்க என்று பேச தொடங்கினார்.
அருவா அமாவாசை அவரை பார்த்து, நீ பேசாதே, உன்னாலத்தான் இவ்வளவு பிரச்சினை என்று அவரை பேசவிடாமல் தடுத்தார். கவுசல்யா என்னசொல்வது என்று தெரியாமல் திணறியபடிநின்றார். (தொடரும்)
-வே. தபசுக்குமார். புதுவை.