June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு மறுப்பு

1 min read

high Court refuses to issue interim injunction against appointment of priests

20.10.2021

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை ஐகோர்ட்டு பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது.

அர்ச்சகர்கள் நியமனம்

கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம்ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு விதிகள் உள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சி.ஐ.டி., நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால் தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பதில் அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.