இந்தியாவில் புதிதாக 11,466 பேருக்கு கொரோனா; 460 பேர் சாவு
1 min read
Corona for 11,466 newcomers in India; 460 deaths
10.11.2021
இந்தியாவில் புதிதாக 11,466 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 460 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 6,409 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 88 ஆயிரத்து579 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 384 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 460 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,849 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 11,961 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 87 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,39,683 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 264 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 71,644 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் கேரளாவில் மட்டும் சுமார் 51 சதவீதம் பேர் உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று 52,69,137 டோஸ்களும், இதுவரை 109 கோடியே 63 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 12,78,728 மாதிரிகளும், இதுவரை 61.85 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.