June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாட்டிக்கு சேலைகொடுத்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை

1 min read

Kannayiram gave saree to old leady / Story by Thabasukumar

12.11.2021

கண்ணாயிரம் பெண்களுக்கு சேலைவாங்கி கொடுத்தது ஏன் என்று பஞ்சாயத்தில் காரசாரவிவாதம் நடந்தது. கண்ணாயிரத்திடம் கேட்டபோது சேலைவாங்கி கொடுத்தது ரகசியம் அதை சொல்லமாட்டேன் என்று சொன்னார். அருவா அமாசை கோபத்தில், எல்லாம் வெளியேவந்துட்டு. இனி என்ன ரகசியம் வாழுது. பெண்களுக்கு சேலைவாங்கிகொடுத்திருக்க. அவங்களுக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல் பூங்கொடியின் சேலைக்கு பின்னால் பதுங்கினார். பூங்கொடி கோபம் அடைந்து எங்க பதுங்குறீங்க. ஒரு பெண்ணு இல்லை. பத்து பெண்ணுக்கு சேலைவாங்கிகொடுத்திருக்கீங்க. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு. சொல்லுங்க. என்று கண்ணாயிரத்தை பிடித்து உலுக்கினார்.
கண்ணாயிரம் இங்கவைச்சு சொல்லமாட்டேன். அது யாருக்கும் தெரியக்கூடாது. என்றார்.
ஒரு முதியவர் ம்.. கண்ணாயிரம் பலே கில்லாடிதான். ஒருபெண்ணை சமாளிக்கிறதே நமக்கு கஷ்டமா இருக்கு. கண்ணாயிரம் சேலைகொடுத்து பத்து பெண்களை கரைக்ட்டு பண்ணியிருக்கான் பாருய்யா என்று சொன்னார். அதை கேட்டதும் பூங்கொடி கோபத்தில் ஏங்க கரைக்ட்பண்ணுறதுக்குதான் சேலை கொடுத்தீங்களா என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே ஆமா, அப்படிதான் கரைக்ட்பண்ணுனேன். என்று சொன்னார்.
முதியவர் உடனே பூங்கொடி கவனமாக இருந்துக்க. உனக்கு போட்டியா பத்து பெண்களும் உன் வீட்டுக்கு வந்திடபோறாங்க என்றார்.
அதை கேட்டதும் பூங்கொடி ஓ என்று அழுதார். அய்யோ இந்த பாவிமனுசர் என்னவெல்லாம் பண்ணிவைச்சிருக்காரு.. நான் என்ன செய்வேன். நான் ஒருத்தி பத்தாதா. இவருக்கு. எனக்கு என்ன குறைச்சல் என்று கண்ணீர் விட்டார்.
அதை பார்த்த முதியவர், இப்போ அழுது என்ன புரோஜனம்.நீ உடம்பை குறைச்சிருக்கனும். பியூட்டிபார்லருக்கு போயி அழகுபடித்திருக்கணும். நீ பூசணிக்காய் மாதிரி இருந்ததால் அவன் வெளியிலே சேலைவாங்கிகொடுக்க ஆரம்பிச்சிட்டான் என்று கண்ணாயிரத்தை மாட்டிவிட்டார்.
அருவா அமாசை ஆத்திரத்தில் ஏய் கண்ணாயிரம் ஏன் சேலைவாங்கி கொடுத்தேன்னு செல்லவேண்டாம். நீ சேலைவாங்கி கொடுத்தபெண்கள் பெயரை சொல்லு. அவங்ககிட்ட நாங்க கேட்டுக்கிறோம் என்றார்.
கண்ணாயிரம் உடனே ஒண்ணு பழக்கடைபாட்டி, இரண்டு ஆப்பக்கடை ஆயா, என்று சொல்லி க் கொண்டு போனார். அதை கேட்டதும் அருவாஅமாவாசை ஏய் நிறுத்து நீ சொல்லுற பாட்டிக்கு வயசு என்ன இருக்கும் என்று கேட்டார்.
உடனே கண்ணாயிரம்.. அதுவா.. பழக்கடைபாட்டிக்கு எழுபது வயசு இருக்கும். ஆப்பக்கடை ஆயாவுக்கு எழுபத்தைந்து வயசு இருக்கும் என்றான். அருவாஅமாவாசை ஒன்றும் புரியாமல், ஏண்டா பாட்டிகளுக்குபோயி ஏண்டா சேலைவாங்கிகொடுத்தே என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே பாட்டி ன்னா என்ன அவங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கே என்று சொன்னார்.
அருவாஅமாவாசை ஆ… கண்ணைகட்டுதே..ஒண்ணும் புரியலையே, டேய். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தா சேலை கொடுத்திருவியா என்றார்.
கண்ணாயிரம் கடுப்பாகி, என்ன விவரம் தெரியாம பேசுறீங்க. அவங்களுக்கு ஓட்டு இருக்குல்ல. அதான் சேலை கொடுத்தேன்னு சொன்னார்.
அருவா அமாவாசை பற்களை கடித்த படி அது தேர்தலில் நிக்கிறவங்கல்லா குடுப்பாங்க. நீ ஏன் கொடுத்தே அதை சொல்லு என்றார். கண்ணாயிரம் உடனே நான் உள்ளாட்சி தேர்தலில் வார்டுகவுன்சிலருக்கு நிக்க போறேன். அதான் என் வார்டில் உள்ள தெரிந்த பெண்களிடம் ஜவுளிக்கடையில என் பெயரை சொல்லி சேலைவாங்கிக்கங்கன்னு சொன்னேன் என்றார்.
உடனே அருவாஅமாவாசை சரி, இந்தபொண்ணு கவுசல்யாவுக்கும் விழுப்புரம். அங்கதான் அந்தபொண்ணுக்கு ஓட்டு இருக்கும். அதுக்கு ஏன் சேலைவாங்கி கொடுத்தே. அதுக்கு பதில் சொல் என்று கேட்டார்.
கண்ணாயிரம் உஷாராக அந்த பெண்ணுக்கு நான் சேலைவாங்கி கொடுக்கலை. அதுவா வாங்கிக்கிட்டு. கண்ணாயிரத்தை தேடி வந்திருக்கேன் என்று சொன்ன வுடன் கடைக்காரர் சேலை கொடுத்திருக்கார் என்று கூறினார். அப்படியா, சமாச்சாரம். சரி, உனக்கு விவரம் பத்தாது. பிறகு எப்படி தேர்தலில் வெற்றிபெற பெண்களுக்கு சேலைவாங்கி கொடுக்கணுமுன்னு உனக்கு ஐடியாகொடுத்தது யார் என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம் எல்லாம் என் நண்பன் தான் ஐடியா கொடுத்தான் என்று சொல்லி சிரித்தார்.
அருவாஅமாவாசை கோபத்தில் உனக்கு இந்த ஐடியா கொடுத்த நண்பன் எங்கே இருக்கான் என்று கேட்டார். கண்ணாயிரம் அதை கவுசல்யாக்கிட்டதான் கேட்கணும் என்று சொன்னார். அருவா அமாவாசை ஏண்டா அந்தபொண்ணுக்கிட்ட கேட்க சொல்லுற. என்றார்.
அதற்கு கண்ணாயிரம் எனக்கு ஐடியா கொடுத்த நண்பனின் மனைவிதான் கவுசல்யா. அதுக்குதான் அவன் எங்கே இருக்கான்னு தெரியும் என்று சொன்னார்.
ம்.. அப்படியா. கவுசல்யா.. உன்கணவர் எங்கே இருக்கார். அவரிடமும் விசாரிக்கணும் என்றார்.
கவுசல்யா, அய்யா, அவரை ஒருவாரம் காணலை. அவரை தேடித்தான் இங்கே வந்தேன். வந்த இடத்திலே இப்படி ஆயிட்டு என்றாள்.
அருவா அமாசை உடனே கணவரைகாணமுன்னா போலீஸ்நிலையத்தில் புகார் பண்ணாம இங்கே ஏன் வந்த என்று கேட்டார்.
அதற்கு அவள் யார் காணாமல் போனாலும் கண்ணாயிரம் கண்டுபிடிச்சு கொடுப்பாரு. அவரைபோய்பாருன்னு சொன்னாங்க. அதான் இங்கே வந்தேன் என்றாள். அதை கேட்டதும் கண்ணாயிரமா கண்டுபிடிச்சு கொடுத்தாரா. எதை கண்டுபிடிச்சு கொடுத்தார் என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே, காணாமல் போன பஞ்சகல்யாணி கழுதை, கடத்தப்பட்ட கோடாங்கி எல்லாத்தையும் நான்தான் கண்டுபிடிச்சு ன். போலீஸ்காரர்கள் பாராட்டினாங்க தெரியுமா என்று தோளை நிமிர்த்தினார்
. அருவாஅமாவாசை அடே, கண்ணாயிரம் பரவாயில்லையே என்று நினைத்தார். கவுசல்யாவை பார்த்து, சரிம்மா.. உன்கணவரை தேடிவந்திருக்க…அவர் பெயர் என்ன என்று கேட்டார். கவுசல்யா உடனே கண்ணாயிரம் என்று சொன்னாள்.
ம்..இந்த சேட்டைதான வேண்டாங்கிறது. கண்ணாயிரம் பூங்கொடி புருசன். நீ உன்கணவர் பெயரை சொல்லு என்று மீண்டும் கேட்டார். அதற்கு கவுசல்யா, மெல்ல கண்ணாயிரம் தான் என் கணவர் பெயரு. என்றாள்.
அருவா அமாசை கடுப்பாகி, ஏம்மா கண்ணாயிரம் யாருன்னு கேட்க கவுசல்யா அது என் கணவர் என்றாள். அருவாஅமாவாசை கோபத்தை அடக்கி கொண்டு இந்த கண்ணாயிரம் யார் என்று கேட்க என் கணவரின் நண்பர் என்றாள் கவுசல்யா.(தொடரும்)

-வே.தபசுகுமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.