கண்ணாயிரம் வீட்டுக்குள் ரகளைசெய்த சேவல்/ நகைச்சுவை கதை
1 min read
cock in Kananyiram house / Story by Thabasukumar
25–11-2021
கண்ணாயிரம் பஞ்சாயத்தில் ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் அருவா அமாவாசையும் ஈட்டி ஏகாம்பரமும் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை கைதுசெய்து போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கண்ணாயிரம் போலீஸ்நிலையத்துக்கு சென்று அருவா அமாவாசையை ஜாமீனில் எடுத்து அழைத்துவந்தார்.
அவர் கண்ணாயிரத்துக்கும் பூங்கொடிக்கும் வீட்டுபிரச்சனையை பஞ்சாயத்துக்கு கொண்டு வராதீங்க என்று அறிவுரைவழங்கிவிட்டு காரில் ஏறிபறந்தார். அப்போது அருவா அமாவாசை மீது தவறுதலாக கல்வீசி ரகசியத்தை கண்ணாயிரம் சொல்ல, பூங்கொடிகோபம்கொண்டு வீட்டுக்குள் செல்ல கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
இந்த நேரத்தில் வெள்ளை நிறசேவல் ஒன்று கண்ணாயிரம் தோளில்வந்து அமர்ந்தது. இதைபார்த்த கண்ணாயிரம்… ஆ.. இது அந்த சேவலு. மோகினிபூஜைக்கு கொண்டுபோனது, கோழிமேல குங்குமம் தடவினது கொஞ்சம் தெரியுது. கோடாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது ஒருதலை காதல் வாலிபர் அவரிடமிருந்து பறித்து பறக்கவிட்டுட்டார். அது எங்கெல்லாமோ பறந்து கடைசியிலே நம்ம வீட்டுக்கே வந்துட்டு. இதை என்ன செய்யலாம். என்று யோசித்தார்.
அப்போது கண்ணாயிரம் மனைவி ஏங்க அங்க என்ன பண்ணுறீங்க. வாங்க வீட்டுக்குள்ள என்று சத்தம் போட்டார். கண்ணாயிரம்.. இதோ வந்துட்டேன்.. என்று சொன்னவர் வெள்ளை சேவலைபார்த்து ஸ்சூ.. ஸ்சூ.. என்றுவிரட்டினார். அது அசையவில்லை. போ.. போ.. என்று சொல்லிப்பார்த்தார். போகவில்லை. தோளில் இருந்து வெள்ளைசேவலை கீழேஇறக்கிவிட்டார். அது அவர் காலையேசுற்றிவந்தது.
கண்ணாயிரம் என்ன செய்வது என்று புரியாமல் ஏய்.. போ… போ.. என்றார். அது கண்ணாயிரம் காலை செல்லமாக கொத்தியது. ஆ.. என்று கண்ணாயிரம் நெளிந்தார்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்த பூங்கொடி என்ன பண்ணிட்டு இருக்கிய உள்ளே வாங்க என்று சத்தம் போட்டார். ஒண்ணுமில்ல.. இதோ வர்றேன் என்று சொல்லியபடி கண்ணாயிரம் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தார். வெள்ளை சேவல் அவருக்கு முன்னால வீட்டுக்குள் ஓடியது. ச்சோ..ச்சோ..என்று கண்ணாயிரம் வெளியே விரட்டினார். ஆனால்.. அது.. வீட்டுக்குள் குடு, குடு என்று ஓடியது.
இதைபார்த்தத பூங்கொடி என்ன கோழியை வீட்டுக்குள் விரட்டிட்டுவாரிய.. வெளியேவிரட்டுங்க… என்றார். கண்ணாயிரம்.. ஏய்.. போ. என்று சொன்னார். வெள்ளை சேவல்.. கழுத்தை ஆட்டியது.
கண்ணாயிரம் திடுக்கிட்டார். என்ன இது வம்பு போச்சு.. என்று யோசித்தார். மீண்டும் போ.. போ.. என்று விரட்டினார். அது வீட்டுக்குள்ளே போகாதபடி அங்கும் இங்கும் ஆடியபடி தடுத்தார். ஆனால் அது அவர் காலுக்கு அடியிலோடி புகுந்து சமையல் அறைக்குள் ஓடியது. அச்சச்சோ..போச்சு..போச்சு..என்றபடி அதன்பின்னால் ஓடினார். சமையல் அறைக்குள் வந்த வெள்ளை சேவலை பார்த்ததும் பூங்கொடி கோபத்தில் ஆ… இதை இங்கே ஏன் விரட்டினிய..உங்களால ஒருவேலை உருப்படியாசெய்யமுடியாது. என்று கத்தினார்.
ஒரு சின்ன கம்பை எடுத்து போ.. போ.. என்று விரட்டினார். அது.. சமையல் அறையை சுற்றி, சுற்றி வந்தது. பூங்கொடி கையிலிருந்த கம்பால். அதை அடிக்க முயன்ற போது சேவல் பறந்து அலமாரியில் ஏறி நின்று கொண்டது. பூங்கொடி..ஆத்திரத்தில்..எங்கபோய் ஏறிநிக்க.இறங்கு..என்று சத்தம் போட்டார். அது கீழே இறங்குவதாக. தெரியவில்லை.
கண்ணாயிரம் மெல்ல சமையல் அறையை எட்டிப்பார்த்தார். பூங்கொடி.. போங்க.. எல்லாம்.. உங்களால தான்.. அது கீழே இறங்கமாட்டேங்குது. என்றார்.
கண்ணாயிரம் அந்த சேவலை. பார்த்து.. கீழே இறங்கு.. என் கண்ணுல்ல..மெல்ல இறங்கு.. என்றார். அது தலையை, தலையைஆட்டியது. ஏங்க.அதுக்கிட்டபோயி..செல்லம் கொஞ்சுறீய.. இரண்டு போடு போட்டா தானா இறங்க போகுது என்றபடி கம்பை எடுத்து சேவலை அடித்தார். அது அலமாரியில் ஓட அங்கு இருந்த பாத்திரங்கள்எல்லாம் கீழே விழுந்தது. அய்யோ.. என் பாத்திரம்.. போச்சு.. என் பாத்திரம் போச்சு.. என்று கத்தினார்.
-வே. தபசுக்குமார். புதுவை