தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Full curfew in Tamil Nadu tomorrow – Chief Minister MK Stalin’s announcement
21.1.2022
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொது ஊரடங்கு கடந்த 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 12-1-2022-ன்படி, கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தியாவசிய செயல்பாடுகள்
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.