ரெயில்வே தேர்வில் முறைகேடு என புகார்: தேர்வர்கள் ரெயிலுக்கு தீ வைப்பு
1 min readComplaint of malpractice in railway examination: The selectors set fire to the train
எ
26.1.2022
ரெயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
ரெயிலுக்கு தீ வைப்பு
ரெயில்வே பணிகளுக்காக ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரெயிலுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ஓடும் ரெயில் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ரெயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளது. நிகழ்விடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறியதாவது:
தற்போது சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ரயிலுக்கு தீ வைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளோம். அரசு பொருள்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம். தேர்வு குறித்து விசாரிக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பீகார் மாநிலம் முழுவதும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல இடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்தனர். ஜெகனாபாத் நகரில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் தீ வைத்து எரித்தன. அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்வே என்.டி.பி.சி தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது கட்ட தேர்வு என்பது ஏமாற்று வேலை எனக் குற்றம் சாட்டியுள்ள தேர்வர்கள், 2019 ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வு எனக்குறிப்பிடவில்லை எனவும் தங்களின் எதிர்காலத்தோடு அரசு விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரெயில்வே தேர்வு வாரியம், தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வுக்கு என்பது முறைப்படி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, போராட்டம் காரணமாக தேர்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.