73-வது குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்
1 min read
Governor RN Ravi hoisted the national flag on the occasion of the 73rd Republic Day
26.1.2022
73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
குடியரசு தினவிழா
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும் போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல்முறையாகும்.
சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை கவர்னரை அறிமுகம் செய்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றார்.
முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அலங்கார ஊர்தி
சென்னையில் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அலங்கார ஊர்திகள் இடம் பெற்றது.
தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் இடம்பிடித்து இருந்தன.
சுதந்திரத்திற்காக போராடிய வேலுநாச்சியார், குயிலி, கட்டபொம்மன், பூலித்தேவன்,அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றுள்ளது. மருது சகோதரர்கள் வழிப்பட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவை இடம்பிடித்துள்ளது.
சுதந்திர போராட்டம், சீர்த்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்களை போற்றும் ஊர்தி இடம்பெற்றது.
பெரியார், இராஜாஜி, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், கக்கன்,ரெட்டிமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.ஐயர், காயிதே மில்லத், ஜே.சி.குமரப்பா ஆகியோரின் சிலைகள் இடம்பிடித்துள்ளது.
சென்னையில் குடியரசு தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.