June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மிரட்டிய நாய்/ நகைச்சுவை கதை

1 min read

The dog that intimidated Kannayiram/ Story by Thabasukumar

19.2.2022
கண்ணாயிரமும் அவர் மனைவி பூங்கொடியும் உடற் பயிற்சி கூடத்துக்கு புறப்பட்டு சென்றபோது வழியில் வந்த முதியவர் வக்கீல் வீட்டுக்கு வழி கேட்டார். அவரிடம் விசாரித்த போது அவரது மகன் ரவுடி கபாலி என்றும் ஜாமீனில் அவன் வெளியே வந்தால் அவன் தன்னைத்தான் கையை வெட்டுவான் என்று தெரிந்த போது கண்ணாயிரம் ஆடிப்போனார். ஆனாலும் மன வலிமை பெற சிலம்பாட்டம் கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தார். இந்த கபாலி எப்போ ஜாமீனில் வருவானோ தெரியலையே என்று பூங்கொடியிடம் புலம்பினார்.அதற்கு பூங்கோடி..ஏங்க..ஏன் கவலைப்படுறிய…அவன் அடிச்சா…நீங்க திருப்பி அடிங்க ..என்றார். அதற்கு கண்ணாயிரம் ஏய் அவன் அடிச்சா திருப்பி அடிக்கலாம்…ஆனா அவன் அரிவாளால கையை வெட்டினான்னா என்ன பண்ணுறது அதுதான் பயப்படுறன் என்றார்.
பூங்கொடி உடனே…நீங்க பயப்படாதீங்க…அரிவாளால் வெட்டவந்தா எப்படி தடுக்கலாமுன்னு சிலம்பத்திலே கற்றுக்குங்க..அவன் அரிவாள் வச்சிருக்கிற கையிலே கம்பாலே ஒரே அடி…அவன் சுருண்டு விழுந்திடமாட்டானா என்றார். அதற்கு அவர் இது நல்லாத்தான் இருக்கு..ஆனா..அவன் வரும்போது என்கையிலே கம்பு இல்லன்னா என்ன பண்ணுறது என்று கேட்டார். உடனே பூங்கொடி நீங்க வெளியிலே எங்க போனாலும் கையிலே சிலம்பு கம்போடு போங்க என்றார். அட…இதை வேற கையிலே தூக்கிட்டு போவணுமா…என்றார் கண்ணாயிரம்.

வேற வழி இல்லை.முதலில் ஒரு மாதிரி இருக்கும்.அப்புறம் பழக்கமாயிரும் என்று பூங்கொடி சொன்னார்.
அப்போது எதிரேவந்த ஒரு பெண்…என்ன கண்ணாயிரம் முகம் ஏன் இப்படி இருக்கு..பவுடர் கிவுடர் அடிக்கக் கூடாதா என்று கேட்டார். கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது.என்னங்க பவுடர் அடிச்சா ஏன் இப்படி பவுடர் அடிச்சிருக்கன்னு கேட்கிற…பவுடர் அடிக்கலன்னா ஏன் பவுடர் அடிக்கலன்னு கேட்கிறீங்க…போங்க நானே ரவுடியை நினைச்சு பயந்து போயிருக்கேன்..என்றார்.
பூங்கொடி அவரை அமைதிபடுத்தினார். ஏங்க கோபப்படுறீங்க…பயத்திலே உங்க முகம் வியர்த்திருக்கில்லா அதனால கேட்கிறாங்க…நீங்க கொஞ்சம் பவுடர் அடிச்சிருந்தா யாரும் நல்லாயில்லன்னு சொல்லமாட்டாங்க என்றார்.
கண்ணாயிரம் அந்த பதிலில் திருப்தி அடையவில்லை. இருவரும் பேசிக்கொண்டே உடற்பயிற்சி கூடத்தை நோக்கி நடந்தார்கள். சிறிது நேரத்தில் உடற்பயிற்சி கூடம் வந்தது.வெளியே நாய்கள் ஜாக்கிரதை என்று பெரிய போர்டு வைக்கப்பட்டிருந்தது.அதில் பெரிய நாயின் படமும் போடப்பட்டிருந்தது.கண்ணாயிரம் அந்த போர்டை உற்றுப்பார்த்தார்.அந்த நாய் அவர் மீது பாய்வது போலிருந்தது. ஆ…கண்ணாயிரம்…உஷாராகிக்க..உள்ளே போனா நாய் கடிச்சிடும் என்று உள் மனம் எச்சரித்தது.
அவர் பூங்கொடியை பார்த்து பூங்கொடி…உள்ளே நாய் இருக்கு போலேயே…அப்படியே திரும்பி போயிடுவோமா என்று கேட்டார். அதற்கு அவர் பயப்படாதீங்க…உடற்பயிற்சி கூடம் நடத்துறவர் என் அப்பாவுக்கு தெரிஞ்சவர். அவர் உங்களுக்கு பக்குவமா சிலம்பம் சொல்லித்தருவார்.நாய் உங்களை கடிக்காம பாத்துக்குவார். போதுமா என்றார். கண்ணாயிரம் எச்சிலை விழுங்கினார்.
அப்போது அங்கே வந்த காவலாளி யார் நீங்க…யார் வேணும்…என்று கேட்டார்.உடனே பூங்கொடி அவரிடம் என் கணவர் சிலம்பம் கற்றுக்க ஆசைப்படுறாரு.அதான் வந்தோம் என்றார்.உடனே காவலாளி …இங்கே பத்து வயதிலிருந்து முப்பது வயசு வரைக்கும்தானே சிலம்பம் கற்றுக்கொடுப்பாங்க..இவருக்கு முப்பதை தாண்டியிருக்குமே என்றார். அதற்கு பூங்கொடி ஆமா..இந்த உடற்பயிற்சி கூடம் நடத்துறவர் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவர்…அதனால அருவா அமாசை மகள் பூங்கொடி வந்திருக்கேன்னு சொல்லுங்க…உடனே அவர் உள்ளே கூப்பிடுவார் என்றார். காவலாளி அப்படியா என்று சொன்னார்.
கண்ணாயிரம் அவரிடம்…உள்ளே நாயில்லாம் இருக்கா என்று கேட்டார்.அதற்கு காவலாளி…ஆமா இரண்டு நாயி இருக்குங்க…யாரும் அனுமதி இல்லாமல் உள்ளே போனால் கடிச்சி குதறிடும் என்றார்.அதை கேட்டதும் கண்ணாயிரம் ம்…சரி உடற்பயிற்சி கூடத்திலே நாய் எதுக்கு என்று கேட்டார்.உடனே காவலாளி என்ன அப்படி கேட்டுபுட்டீங்க…உள்ளே போனவுடன் உடல் தகுதி தேர்வு நடக்கும்.ஒரு கிலோ மீட்டர் தூரம் நீங்க ஓடணும்.உங்களை துரத்திக்கிட்டு நாய் ஓடி வரும்.அதுக்கிட்ட சிக்காம நீங்க தப்பி ஓடி வந்து மாஸ்டர் தலையை தொடணும்.அப்படி நீங்க தொட்டா நீங்க செலக்ட் ஆகிடுவீங்க.மாஸ்டர் ஆள்காட்டி விரலை காட்டி ஜிம்மின்னு சொன்னாருன்னா நாய் அவர் ஆணைக்கு கட்டுபடும்.அவர் நிக்க சொன்ன இடத்திலே நிக்கும்.கடிக்காது என்றார்.கண்ணாயிரம் அவரிடம் நாமும் ஆள்காட்டி விரலை காட்டி ஜிம்மி நில்லுன்னு சொன்னா நிக்காதா என்று கேட்டார்.மாஸ்டர் சொன்னாதான் அது கேட்கும்.வேறு யாரு சொன்னாலும் அது கேட்காது என்றார்.என்னங்க எல்லா நேரமும் மாஸ்டர் உள்ளே இருப்பாரா என்ன…அவர் இல்லாத நேரத்தில் என்ன பண்ணுறது என்று கண்ணாயிரம் கேட்டார்.அதற்கு அவர் உள்ளே மாஸ்டர் இல்லன்னா யாரையும் உடற்பயிற்சி கூடத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.(தொடரும்)


வே.தபசுக்குமார், புதுச்சேரி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.