உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்
1 min read
Coimbatore student enlisted in the Ukrainian paramilitary
8/3/2022
உக்ரைன் துணை ராணுவத்தில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்து பணியாற்றி வருவது குறித்து மத்திய, மாநில உளத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் துணை ராணுவம்
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால், கோவையை சேர்ந்த சாய்நிகேஷ்(வயது 22) என்பவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார்
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் 2019 முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலை கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை ராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அபாய நேரங்களில், மருத்துவ உதவிகள் வழங்கவது மற்றும் பேரிடர் மேலாண்மை காலங்களில் இந்த துணை ராணுவ பிரிவு வீரர்கள் பயன்படுத்தி கொள்ளப்படுவார்கள்.
சிறு வயது முதலே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக விண்ணப்பித்து இருந்தார். உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவர் சேர முடியவில்லை. உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை ராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது மத்திய,மாநில உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மாணவர், பெற்றோருடன் போனில் பேசி வந்தாலும், இந்த விவகாரத்தில் எதுவும் கூற குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.