காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
3 terrorists shot dead in Kashmir
16.3.2022
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பதுங்கியிருந்த லஸ்கர் இ தொய்பா மற்றும் பிற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கு பதிலடியாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. அதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பயங்கரவாத பொருட்கள் மீட்கப்பட்டன.
முன்னதாக கடந்த 9ம் தேதியன்று, ஸ்ரீநகரின் கன்மோச் பகுதியில் சர்பஞ்ச் என்றழைக்கப்படும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ‘சர்பாஞ்ச் சமீர் பாட்’ என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இன்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்தார்.