August 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அந்தமான் சிறையில் சி. பி. ராதாகிருஷ்ணன் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி

1 min read

C.P. Radhakrishnan pays tribute to freedom fighters at the Andaman Cellular Jail.

9.8.2026
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தமான் செல்லுலார் சிறையில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக மத்திய செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:-

சாவர்க்கருடைய போராட்டம் வரலாற்றில் எந்த நிலையிலும் யாராலும் புறக்கணிக்க முடியாத மாபெரும் வீர போராட்டம். சாவர்க்கருடைய தியாகத்திற்கு ஈடிணை எதுவும் இல்லை, அவரது மகத்தான தியாகம் என்றென்றும் நாட்டிற்கு பேரூக்கமாக விளங்கும். தீண்டாமைக்கு எதிரான சாவர்க்கரின் குரல், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அவர் எழுப்பிய குரலை போலவே வலிமையானது.

துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷ் கடற்படை விமான தளத்தை வந்தடைந்த அவரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை கவர்னர் அட்மிரல் (ஓய்வு) தேவேந்திர குமார் ஜோஷி, மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பும் அளிக்கப்பட்டது.

தமது பயணத்தின் ஒரு பகுதியாக, துணை ஜனாதிபதி தேசிய நினைவு சின்னமான செல்லுலார் சிறையை பார்வையிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக அளப்பரிய தியாகங்களை செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். செல்லுலார் சிறையில் சாவர்க்கர் கொடும் துன்பத்துக்கு உள்ளான சிறை அறையில், துணை ஜனாதிபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்தார்.

செல்லுலார் சிறையை பார்வையிட்ட பின்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

வீர சாவர்க்கருடைய வாழ்க்கை போராட்டமும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிரான அவருடைய விடுதலை போராட்டமும் சரித்திரத்தில் எந்த நிலையிலும் யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு மாபெரும் வீர போராட்டம். செல்லுலார் சிறையில் சாவர்க்கர் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்தார்.

இந்த சிறை அறைக்கு நேர் எதிரில் அமைந்திருந்த தூக்கு மேடையில் ஆங்கிலேயர்கள் ஏராளமான கைதிகளை தூக்கிலிட்டதாகவும், அந்தக் காட்சிகளை சாவர்க்கர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறை அறை அவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், எதுவும் அவருடைய மன உறுதியை குலைக்கவில்லை.

இதே சிறைச்சாலையில் சாவர்க்கருடைய சகோதரரும் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாத அளவிற்கு சிறை வாழ்க்கை கொடுமையானதாக இருந்தது. சாவர்க்கர் கட்டிய கோவிலில், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக நியமித்தார். தீண்டாமைக்கு எதிரான சாவர்க்கரின் குரல், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அவர் எழுப்பிய குரலை போலவே வலிமையானதாகவும் உத்வேகம் நிறைந்ததாகவும் இருந்தது.

சாவர்க்கருடைய தியாகத்திற்கு ஈடிணை எதுவும் இல்லை. அவரது மகத்தான தியாகம் என்றென்றும் நாட்டிற்கு நினைவாக இருக்கும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செல்லுலார் சிறையில் அமைந்துள்ள தூக்குமேடை மற்றும் அருங்காட்சியகக் கண்காட்சி அரங்கத்தையும் பார்வையிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான வேலைகள் மற்றும் தண்டனைகளை விளக்கும் மாதிரிகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்கு நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்கும் ஒளி-ஒலி நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார்.

மேற்கண்டவாறு மத்திய அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *