பஞ்சாபில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்
1 min read
Former MLAs in Punjab will now be given pensions only once
25.3.2022
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவி்த்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவியேற்றப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் எம்எல்ஏ ஒரு முறை ஓய்வூதியமாக மாதம் ரூ.75,000 பெறுகிறார். அதன்பிறகு, ஒவ்வொரு அடுத்தடுத்த காலத்திற்கும் ஓய்வூதியத் தொகையில் 66 சதவீதம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீக்கி பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட பகவந்த் மான் அதில் கூறியிருப்பதாவது:-
ஓய்வூதியம்
எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூப்பிய கரங்களுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறார்கள். ஆனால், மூன்று முறை, நான்கு முறை, ஐந்து முறை வெற்றி பெற்ற பல எம்எல்ஏக்கள் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் தேர்தலில் போட்டியிட்டு சீட்டு கிடைக்காமல் போன பின்பும், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஒருவருக்கு ரூ.3.50 லட்சமும், ஒருவருக்கு ரூ.4.50 லட்சமும், ஒருவருக்கு ரூ.5.25 லட்சமும் ஓய்வூதியமாக கிடைக்கிறது. இது கருவூலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
ஒருமுறைதான்
அதனால், பஞ்சாபில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் 2 முறை, 5 முறை அல்லது 10 முறை வெற்றி பெற்றாலும், இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் பெறுவார்கள். இது அவர்களது குடும்ப ஓய்வூதியத்திலும் குறைக்கப்படும். அதில் சேமிக்கப்படும் பணம் மக்களின் நலனுக்காக செலவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.