2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: 90 சதவீத பஸ்கள் ஓடியதால் பெரிய பாதிப்பு இல்லை
1 min readTrade unions strike for 2nd day: No major damage as 90 per cent of buses ran
29.3.2022
2-வது நாளாக இன்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இன்று 90 சதவீத பஸ்கள் ஓடியதால் பெரிய பாதிப்பு இல்லை.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,. தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.
தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
2-வது நாள்
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொது நிறுவன ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று போல் இன்றைய வேலை நிறுத்தம் தீவிரமாக இல்லை. பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் நடந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் 90 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமங்கள் இன்றி செல்ல முடிந்தது. அலுவலகம் செல்வோரும் சிரமம் இன்றி சென்றனர்.