போரூர் ராமநாதீசுவரர் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min readOccupancy of Porur Ramanathiswarar temple property: High Court orders action
3.6.2022
சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதீசுவரர் கோவில்
சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள், நிலங்கள் அபகரிக்கப்படுவதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்தார்.
ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோயிலுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குத்தகைதாரர்களிடம் வசூலிக்க வேண்டிய பாக்கியும் அதிக அளவில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தார்.
அந்த புகாரின் மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்கிரமிப்புகளும், அபகரிப்புகளும் அதிகரித்து வருவதால் அவற்றை தடுத்து கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும். எனவே, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆ. ராதாகிருஷ்ணன் அளித்த மனுக்களை தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.