சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதை கண்காணிக்க வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
1 min read
Change to two-judge bench to oversee removal of semlock oak trees
17.8.2022
சீமை கருவேல மரங்கள் அகற்றுவதை கண்காணிக்க இரு நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சீமைக் கருவேல மரங்கள்
தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி கூறியதாவது:-
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திருந்தாலும், மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் அந்த மரங்களை காண முடிகிறது.
இந்த வகை மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த மரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக எந்திரங்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினர்.
பின்னர், “சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக இந்த வழக்குகளை எல்லாம், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுகிறோம்” என்று உத்தரவிட்டனர்.