மும்பை அருகே ஏகே-47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு பற்றி பரபரப்பு தகவல்
1 min read
Exciting information about a boat washed ashore near Mumbai with AK-47 guns
19.8.2022
மராட்டிய மாநிலத்தில் கடற்கரையில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் ஒரு படகு வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. இது மஸ்கட்டில் இருந்து வந்தது என்பது தெரியவந்துள்ளது.
ஏ.கே.47 துப்பாக்கியுடன் படகு
மராட்டிய மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர்-ஸ்ரீவர்தன் கடற்கரையில் மூன்று ஏகே 47 துப்பாக்கிகளுடன் 16 மீட்டர் நீளமுள்ள படகு வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து உள்ளூர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
படகு கண்டுபிடிக்கப்பட்ட இடம் மும்பையில் இருந்து 200 கிமீ தொலைவிலும், புனேவில் இருந்து 170 கிமீ தொலைவிலும் உள்ளது. ராய்காட் ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு படகில், உடைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இவ்விழாவின் போது மக்கள் இங்கு பெருமளவில் வருவார்கள். இந்நிலையில் பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா என்ற அச்சம் எழுந்த நிலையில், ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த படகு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்துமாறு மராட்டிய முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்காட் எம்எல்ஏ அதிதி தட்கரே செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மஸ்கட்டில் இருந்து..
அந்த படகு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஹனா லார்டோர்கன் என்பவருக்கு சொந்தமானது. அவரது கணவர் ஜேம்ஸ் ஹோபர்ட் தான் படகின் கேப்டனாக இருந்தார். அந்த படகு மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், கடலில் ஏற்பட்ட அதிக அலை காரணமாக மிதந்து கரை ஒதுங்கியுளளது.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
என்ஜின் கோளாறு
கடற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஜூன் மாதம் அந்த படகில் என்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் விடப்பட்டது. படகு விபத்துக்குள்ளானதால் அதில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் இப்போது அந்த படகு இங்கு கரை ஒதுங்கி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.