போக்குவரத்து அதிகாரிக்கு ரூ. 300 கோடி சொத்து- சோதனையில் அதிர்ச்சி தகவல்
1 min read
Transport Officer Rs. 300 crore property- Shocking information in the investigation
19.8.2022
போக்குவரத்து அதிகாரி வீட்டில் சோதனை செய்தபோது அவருக்கு ரூ.300 கோடி சொத்து இருப்பது தெரியவந்தது.
போக்குவரத்து அதிகாரி
மத்தியப் பிரதேசத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் பால். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்தாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திகைப்பு
அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தைக் கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளே ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டனர்.
சந்தோஷ் பால் வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ. 16 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், சொகுசு கார்கள் மீட்கப்பட்டன.
இது தவிர அவருக்கு மேலும் நான்கு வீடுகள் மற்றும் ஒரு பண்ணை வீடு இருப்பதும் இந்த சோதனையில் தெரிய வந்தது. அது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.
ரூ.300 கோடி
முதற்கட்ட விசாரணையில் மொத்தம் ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துகள் மீட்கப்பட்டன. இந்தத் தம்பதி தங்கள் வருமானத்தைக் காட்டிலும் 650 சதவீதம் அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்தும் தெரிய வந்தது.
இதையடுத்து அனைத்தையும் போலீசார் கைப்பற்றிச் சென்றனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பலரும் இங்கு பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு இவர் மீது ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தப்பட்டது.
10,000 சதுர அடியில் உள்ள அவரது வீட்டில் ஒரு நீச்சல் குளம், ஜக்குஸி மற்றும் மினி பார் மற்றும் சிறிய தியேட்டர் ஒன்றும் இருந்து உள்ளது. வீடு அரண்மனை போல் உள்ளது.