சபரிமலை கோவில் தங்க மேற்கூரையில் நீர் கசிவை சீர்செய்ய கேரள ஐகோர்ட்டு உத்தரவு
1 min readKerala High Court orders to repair water leakage in golden roof of Sabarimala temple
26.8.2022
சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தின் தங்க மேற்கூரையில் நீர் கசிவு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. நீர் கசிவை உடனடியாக சீர்செய்ய கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மழை காலங்களில் தங்க மேற்கூரையில் நீர் கசிவு ஏற்படுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் அதிகாரிகள் மேற்கூரையில் கசிவு எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிபுணர் குழுவும் கூரையை பார்வையிட்டனர்.
இதில் தங்க மேற்கூரையில் தகடுகளை இணைக்கும் ஆணிகள் மூலமாக நீர் கசிவு ஏற்படுவது தெரியவந்தது. இதனை சரிசெய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உத்தரவு
இந்த நிலையில் சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு குறித்த புகார் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சிறப்பு ஆணையர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரை நீர் கசிவை சரிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் மூலம் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சபரிமலை கோவில் சன்னிதான மேற்கூரை நீர் கசிவை செப்டம்பர் 7-ந் தேதிக்குள் சீர்செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.