மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி
1 min read
Prisoners are allowed to spend 2 hours in a separate cell with their wives
22.9.2022
பஞ்சாப் மாநிலத்தில் மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் சலுகையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கைதிகள்
பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வரும் 27-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர இருக்கிறது. நபா மாநகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச்சாலைகளில் இது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே இந்த முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது மனைவியுடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்படும். இத்தகைய அனுமதியின் மூலம், சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும். அதோடு, அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும். இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவனுக்கு மட்டுமே சிறையில் உள்ள தங்கள் இணையருடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என அந்த அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.