நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min readPermission for RSS procession on November 6.. Action order given by the court
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நவம்பர் 6 ஆம் தேதி அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
விஜயதசமி, 75-வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28-க்குள் அனுமதி தொடரபாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது. மத நல்லிக்கணத்தை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது; இந்த ஊர்வலத்துக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் இயக்க அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அக்டோபர் 2-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்திருந்த சமூக நல்லிணக்கப் பேரணி உள்ளிட்டவைக்கும் அனுமதி இல்லை என அறிவித்தது தமிழக போலீஸ்.
இதனையடுத்து திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதிக்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அக்டோபர் 2 தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று கூறிய நீதிமன்றம், நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ் தரப்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அக்டோபர் 31க்கு தள்ளிவைத்தது.