இந்தோனேசியா வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு
1 min readIndonesia violence death toll rises to 174
2.10.2022
கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 174 பேர் இறந்தனர்.
இந்தோனேசியாவில் வன்முறை
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர்.
இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் அதிக நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள். சுமார் 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
38 ஆயிரம் பேர் அமரும் மைதானத்தில் 42 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது தவறு என்று அதிகாரிகள் கூறினர். ஒரு குறிப்பிட்ட வழியாக மட்டும் மைதானத்தை விட்டு வெளியேற, பலர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் பலர் நசுக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்று போலீசார் கூறினர். மைதானத்தில் உள்ள கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தியது தவறு என்றும் கூறினர்.