குற்றாலம் அருவிகளில் வெள்ளம்; குளிக்கத் தடை
1 min read
Flooding at Courtalam Waterfalls; Ban on bathing
27.12.2022
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு..
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவியில் புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயின் அருவிக்குச் செல்லும் பாதையில் கயிறு கட்டி போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை செல்போன்களில் படம் எடுத்தும், செல்பி எடுத்தும் ஆறுதல் அடைந்தனர்.
பழைய குற்றாலம்
பழையகுற்றாலத்திலும் வெள்ளம் சீறி பாய்கிறது. அருவியை நெருங்க முடியாத அளவிற்கு வெள்ளம் இருப்பதால் கார் பார்க்கிங் பகுதியிலேயே சுற்றுலாப் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அனால் சிற்றாற்றில் இருந்து பாசனம் பெரும் குளங்களுக்கு அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதில் பல குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
அணைகள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை குண்டாறு அணை,
இராமநதி, கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணை ஆகிய அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் அனைத்து குளங்களுக்கம் தண்ணீர் வரத்து இருப்பதால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் குடிநீர்பிரச்னை இருக்காது என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.