கடையம் பகுதியில் தொழிற்சாலை கோரி ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
1 min readFederation of Panchayat Heads resolution demanding factory in Katayam area
28.12.2022
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிதாக தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கடையம் ஒன்றிய அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்கள்
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் 16 வது கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப் பேரி டி.கே பாண்டியன் தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய கூட்டமைப்பின் பொருளாளர் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டமைப்பின் செயலாளர் பூமிநாத், கௌரவ தலைவர்கள் அழகுதுரை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நன்றி
இந்த கூட்டத்தில் ஒன்றிய , மாநில அரசுகள் வழங்கும் நிதியிலிருந்து தொடங்கப்படும் வேலைகளுக்கு ஊராட்சி தலைவர் தலைமை வகிக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு 1500 ரூபாய், சுய உதவி குழுக்களுக்கு அதிக நிதி உதவி, சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களின் நாட்டு உடமை ஆக்கியது, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டி தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதிய தொழிற்சாலை
மேலும் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள வேண்டும் .கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிதாக தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்லம்மாள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாப்பாங்குளம் முருகன், திருமலையப்பபுரம் மாரியப்பன்,
கீழஆம்பூர் மாரிசுப்பு, மேல ஆம்பூர் குயிலி லட்சுமணன், தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி. கே பாண்டியன் 2023 ஆம் ஆண்டு டைரி மற்றும் காலண்டர்களை வழங்கினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் சிறப்பாக செய்திருந்தார்.