ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணில் போட்டியிடுவது யார்?
1 min readADMK in Erode by-election Who is competing in the coalition?
21.1.2023
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவது யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில் அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.
வேட்பாளர் யார்?
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
பாஜக போட்டியா?
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் கூறினார். மேலும், பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம்’ என்றார்.
அதேவேளை கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுமா? இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுமா? அல்லது இணைத்து ஒரு வேட்பாளரை நிறுத்துமா? என்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குமா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்று சந்தித்தனர். தமிழ்நாடு பாஜக தலைமையகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அணி தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகளை சந்தித்தனர். பழனிசாமி அணி தரப்பு சார்பாக ஜெயக்குமார், தங்கமணி, கேபி முனுசாமி, செங்கோட்டையன் உள்பட அதிமுக முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். பாஜக தரப்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நாராயணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். மாலை 3.15 மணியளவில் கூட்டம் தொடங்கிய நிலையில் 20 நிமிடத்திற்குள் கூட்டம் நிறைவடைந்தது. கூட்டம் தொடங்கிய வேகத்தில் நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், பாஜக அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார்’ என்றார். இடைத்தேர்தலில் பாஜக கட்சி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவளிக்குமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது விரைவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.