சபரிமலை வெற்றிலையுடன் போடப்பட்ட காணிக்கை பணம் சேதம் அடைந்தது
1 min readThe offering money with Sabarimala betel was damaged
21.1.2023
சபரிமலை வெற்றிலையுடன் போடப்பட்ட காணிக்கை பணம் சேதம் அடைந்ததால் பணத்தை எண்ண கோவில் நிர்வாகம் புதிதாக 479 ஊழியர்களை நியமித்து உள்ளது.
வெற்றிலையுடன் காணிக்கை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்கள் நிறைவு பெற்றது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சபரிமலையில் உள்ள உண்டியல்களில் வெற்றிலையுடன், பணத்தை கட்டி காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்களை கோவில் நிர்வாகம் உடனுக்குடன் திறந்து எண்ண வேண்டும். இல்லையேல் காணிக்கை பணத்துடன் கட்டப்பட்ட வெற்றிலை அழுகி பணம் சேதமாகி விடும்.
மகர விளக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வெற்றிலையுடன் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் உடனடியாக திறந்து எண்ணப்படவில்லை. இதனால் உண்டியலில் போடப்பட்ட பணம் வெற்றிலை அழுகியதால் சேதமாகி விட்டது. இவ்வாறு சேதமான பணம் பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு கேள்வி
இதுபற்றி தகவல் வெளியானதும் கேரள ஐகோர்ட்டு, உண்டியல் காணிக்கை உடனடியாக எண்ணப்படாதது ஏன்? என்பது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சபரிமலை கோவில் அதிகாரிகள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
479 ஊழியர்கள் நியமனம்
மேலும் சபரிமலையில் உண்டியல் மூலம் வசூலான பணம் மலைபோல் குவிந்துள்ளது. இவற்றை எண்ண கோவில் நிர்வாகம் புதிதாக 479 ஊழியர்களை நியமித்து உள்ளது. இவர்கள் மூலம் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. 25-ந் தேதி வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.