ஜி20 மாநாட்டு: மகாபலிபுரத்தில் பலத்த பாதுகாப்பு
1 min readG20 Summit: Tight security at Mahabalipuram
29.1.2023
ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகை எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆய்வு செய்தார்.
ஜி20 மாநாடு
ஜி20 மாநாடு வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர ஓட்டல், கிண்டி ஐ.ஐ.டி ஆகிய இடங்களில் நடக்கிறது. இம்மாநட்டில் 20 நாடுகளை சேர்ந்த 150 விருந்தினர்கள் , பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர்.
மெட்டல் டிடெக்டர்
இதற்கிடையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும்(ஞாயிறு), இன்றும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களின் நுழைவு வாயில் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் உடைமைகள், பைகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் தீவிரமாக பிசோதித்த பிறகே புராதன சின்னங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுற்றுலா பயணிகளுக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புராதன சின்னங்களின் நுழைவு வாயிலில் பாதுகாப்பில் உள்ள போலீசாரிடம் சுற்றுலா பயணிகளை தீவிரமாக பரிசோதித்த பின்னரே அவர்கள் சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.
வாகன தணிக்கை
மேலும் நேற்று முதல் மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகர நுழைவு வாயில் பகுதியில் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு நகருக்குள் வர அனுமதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் முழுமையாக சோதனை செய்யும் போலீசார், வாகன எண்களை குறித்து கொண்டு, வாகனங்களில் வருபவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்த பிறகே மாமல்லபுரம் நகருக்குள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதித்து வருகின்றனர். இதற்கடையில் ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் சொகுசு பேருந்து மூலம் பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரம் வருவதால், நேற்று மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் ஆளி்ல்லா 5 காலி பேருந்துகளை புரதான சின்னங்கள் உள்ள சாலைகளில் ஓடவிட்டு எந்ததெந்த சாலைகளில் ஜி20 மாநாட்டு விருந்தினர்களை அழைத்து செல்வது, பேருந்துகள் நிறுத்துமிடம், அவர்கள் புராதன சின்னங்களை கண்டுகளித்த பிறகு அவர்களை எப்படி பாதுகாப்பாக அழைத்து சென்று பேருந்தில் ஏற்றுவது போன்றவைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.