நெல்லையில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி
1 min readFraud of Rs. 16 lakh by claiming to take a loan from a bank in Nellai
6.5.2024
நெல்லையை அடுத்த தாழையத்து அருகே உள்ள பாலாமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.
இவருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்த கேரள மாநிலம் கொல்லம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிபின் (35) உள்பட 4 பேர் பாலசுப்பிரமணியனை சந்தித்துள்ளனர்.
பின்னர் வங்கி அதிகாரியை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்களுக்கு ரூ.16 லட்சம் கமிஷன் கொடுத்தால் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் ரூ.16 லட்சம் பணத்தை சிபின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிபின் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து சிபினை சந்திக்க முயன்ற போது அவர் தலை மறைவாகிவிட்டார்.
இதுகுறித்து பால சுப்பிரமணியன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், பிச்சையா ஆகியோர் தலைமறைவான சிபினை தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நெல்லை நீதிமன்றத்தில் சிபின் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.