புளியரையில் சாலை மறியல்; ரவிஅருணன் உட்பட பலர் கைதாகி விடுதலை
1 min readRoad blockade at Puliyarai; Many others including Ravi Arunan were arrested and released
14/2/2023
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி புளியரை சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர், அவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
கனிம பொருட்கள் கடத்தல்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மூலம் மணல் ஜல்லி கற்கள் குண்டுகள் உட்பட கனிம வளங்கள் சட்ட விரோதமாக தன் கணக்கில் கொண்டு செல்லப்படுகிறது இதனை தடுத்து நிறுத்த கோரி தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. ரவிஅருணன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றம் மூலம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பில் புளியரை வாகன சோதனை சாவடி முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான
கே.ரவிஅருணன் தலைமையில் புளியரை ஜமீன் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் 250 கும மேற்பட்ட பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
வாக்குவாதம்
அப்போது போலீசருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து கனிம வளங்களை கடத்திச் செல்லும் கனரக வாகனங்கள் சிறிது நேரம் ஆங்காங்கு போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை செங்கோட்டை காங்கிரஸ் பிரமுகர் செ.ராமோகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கு அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அதுவரை நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர் அதனை தொடர்ந்து போலீசார் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனாலும் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது திருமண மண்டபத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.