காதல் திருமணம் செய்த வாலிபர் கஞ்சா வழக்கில் கைது; மனைவி கண்ணீர் மனு.
1 min readYouth who married for love arrested in ganja case; Wife tearful petition.
15.2.2023
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் பொய்யாக கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளதாக காதல் மனைவி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
புகார் மனு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சுபாஷ் (வயது 24) இவரது மனைவி சண்முகப் பிரியங்கா (வயது 22) மருத்துவக்கல்லூரி மாணவி இவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துறை ரவிச்சந்திரன் இடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
நான் கடையநல்லூரைச் சேர்ந்த சுபாஷ் என்ற சிவில் இன்ஜினியரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்காக கடந்த 11ஆம் தேதி சென்றிருந்தார். நேர்முகத் தேர்வு முடிந்ததும் ஊருக்குத் திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு வந்த இரண்டு போலீசார் எனது கணவரை காவல் நிலையம் வரை வந்து செல்லுமாறு அழைத்துச் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் நான் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டபோது எனது கணவர் சுபாஷின் பையில் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருந்ததாக கூறினார்கள். அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு அவரது பையில் கஞ்சா இல்லை என்றும் உங்களது வீட்டின் பின்புறம் இருந்து கஞ்சா எடுக்கப்பட்டுள்ளது. என்றும் கூறினார்கள்.
அப்போது அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன்.
மிரட்டல்
நான் சுபாஷை காதல் திருமணம் செய்த போது எனது உறவினர் ஒருவர் கோபத்தில் உன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என்று போனில் மிரட்டினார்.அதை நாங்கள் பதிவு செய்து வைத்துள்ளோம்.. இப்போது அந்த நபர் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை மூலம் இப்படி ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்து எனது கணவரை கைது செய்து பாளை மத்திய சிறைச்சாலையில் அடைத்து உள்ளார்கள்.
நான் நான்கு மாத கால கர்ப்பிணியாக இருக்கிறேன் எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மீது சத்தியமாக கூறுகிறேன். அந்த கஞ்சாவிற்கும் எனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை இதன் பின்னணியில் சில நபர்கள் காவல் துறையில் செல்வாக்கு படைத்தவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு பொய்வழக்கில் இருந்து எனது கணவரை விடுவித்து எங்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வா அவர் அந்த மனவில் கேட்டுக்கொண்டுள்ளார்
மனுவினை படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.