மண்டைக்காடு கோவில் விவகாரம் சுமூகமாக முடியும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
1 min readMandaikkadu temple issue will be resolved smoothly- Minister Shekharbabu interview
21/2/2023
மண்டைக்காடு கோவில் விவகாரம் சுமூகமாக முடியும் என்றும் அனைத்து மக்களும் சாதி,சமுதாய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகாபாபு கூறினார்.
மண்டைக்காடு
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் ஆலயங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இது வரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா நிகழ்ச்சி 5-ந் தேதி தான் நடக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. தற்போது அங்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு புலப்படுகிறது. அரசை பொருத்தவரை பிரச்சினையை பெரிதாக்க விரும்பாது. அனைத்து மக்களும் சாதி,சமுதாய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்க வேண்டும்.
தக்கலை கோவில்
தக்கலை வேளி மலை குமார கோவில் முருகன் கோவிலில் புணரமைப்பு பணிகள் செய்வதற்காக ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன். பணிகள் அனைத்தும் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழா நடைபெறும். வேளிமலை குமார கோவிலில் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
இங்கு திருமணம் நடத்துவோர் பயன்படுத்தும் சமையல் கூடங்கள், தங்கும் அறைகள் போன்றவை சிதிலமடைந்துள்ளன. அவற்றை புணரமைப்பதா? அல்லது புதிதாக திருமண மண்டபம் கட்டுவதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை தந்தவுடன், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிதாக திருமண மண்டபம் கட்டலாமா? என பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.