உதயநிதி ஸ்டாலினைப்போல் அண்ணாமலையும் செங்கலை காட்டி பிரசாரம்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2023/02/அண்ணாமலை-செங்கல்.jpg)
Like Udayanidhi Stalin, Annamalai is also a brick-and-mortar campaign
21.2.2023
உதயநிதி ஸ்டாலினைப்போல் அண்ணாமலையும் செங்கலை காட்டி பிரசாரம் செய்தார்.
உதயநிதி பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. நேற்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார். மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார். இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.
அண்ணாமலை பதிலடி
இதற்கு பதிலடியாக நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.
உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.