இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டியது
1 min read
After 3 months in India, daily cases of Corona crossed 300
4.3.2023
இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டியது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 3 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி பாதிப்பு 169 ஆக இருந்தது. மறுநாள் 240, 2-ந் தேதி 268, நேற்று 283-ஆக இருந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு இன்றும் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நவம்பர் 27-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 343 ஆக இருந்தது. அதன்பிறகு சுமார் 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்று மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 74 பேர், மகாராஷ்டிராவில் 66 பேர், கேரளாவில் 58 பேர், தெலுங்கானாவில் 26 பேர், தமிழ்நாட்டில் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 170 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,686 ஆக உள்ளது. இது நேற்றைவிட 161 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 2பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,775 ஆக உயர்ந்துள்ளது.