தற்போது பலருக்கு தொடர்ந்து இருமல் வருவதற்கு என்ன காரணம்?
1 min readWhat causes so many people to have a persistent cough these days?
4.3.2023
தற்போது பலருக்கு காய்ச்சல் விட்டாலும் தொடர்ந்து இருமல் வருவதற்கு என்ன காரணம் என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்துள்ளது.
இருமல்
காய்ச்சலும் குணமாகி விட்டது. இருமலும் கொஞ்சம் பரவாயில்லை. தொண்டை கரகரப்புதான் குறையமாட்டேங்குது என்ற உரையாடல் பெரும்பாலான இடங்களில் கேட்கிறது. இந்த கரகரப்பு சத்தம் நம்மூரில் மட்டுமல்ல நாடு முழுவதும் கேட்கிறது. இதற்கு காரணம் புதிதாக அவதாரம் எடுத்துள்ள ‘எச்-3 என்2’ என்ற வைரஸ் தான் என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து ஏராளமானவர்கள் காய்ச்சல், இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுக்கிறார்கள்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள 30 வைரஸ் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் மூலம் சோதனை மேற்கொண்டது. அப்போது தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் ‘எச்3என்2’ வைரஸ் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இன்புளூயன்சா காய்ச்சலை உருவாக்கும் மற்றவகை வைரசைவிட இந்த வைரஸ் தாக்கினால் ஆஸ்பத்திரிக்கு செல்ல வைத்துவிடுகிறது.
இந்த வைரஸ் தாக்கும் நோயாளிகளில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாசப் பிரச்சினை, 16 சதவீதம் பேருக்கு வீசிங் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானர்வர்கள் மூச்சுக்குழாய் ‘இன்பெக்ஷன்’ காரணமாக தொண்டை வலி மற்றும் கரகரப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.