தென்காசி அரசு மருத்துவமனையில் மேலும் 3இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்
1 min read
3 more blood purification machines in Tenkasi Government Hospital
10.3.2023
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு
கூடுதல் எண்ணிக்கையிலான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு விழா.நடைபெற்றது.
உலக சிறுநீரக தினம்
உலக சிறுநீரக தினம் 2006 முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் ஒன்பதாம் தேதியான கடந்த வியாழக்கிழமை தென்காசி அரசு மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது
தென்காசி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2014 டிசம்பர் முதல் 2 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் இரத்த சுத்திகரிப்பு பிரிவு திறக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்தது. பின்னர் நோயாளிகளின் நலனுக்காக 3 இயந்திரங்கள் அதிகரிக்கப்பட்டு 5 இயந்திரங்களுடன் தற்போது வரை செயல்பட்டு வருகிறது .
மேலும் 3 எந்திரங்கள்
இங்கு தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுநீரக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர் ஆனாலும் அதிக அளவில் நோயாளிகள் இருப்பதால் இங்கு இரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமல் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களின் அலைச்சலை குறைப்பதற்காகவும் நோயாளிகளின் நலனுக்காகவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் அவர்களின் சீரிய முயற்சியினால் கூடுதலாக 3 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் தென்காசி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. .
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூன்று ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சுமார் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது .
இதனை தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் துரை இரவிச்சந்திரன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் .
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார் , தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் , உறைவிட மருத்துவர் எஸ்.எஸ்..ராஜேஷ் , உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறுநீரக பிரிவு மருத்துவர் கார்த்திகேயன் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு , பத்மாவதி, திருப்பதி ,செவிலியர் சத்யா , இரத்த சுத்திகரிப்பு நுட்புனார்கள் அருள்ராஜ் , மனோ மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்வின் பேசும்போது, "தென்காசி மாவட்டம் முழுவதும் 99 சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .தென்காசி மாவட்ட சிறுநீரக நோயாளிகள் இனி வரும் காலங்களில் மருத்துவக் குறிப்புகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து, இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.