அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து- நயினார் நாகேந்திரன் பேட்டி
1 min read
Annamalai spoke about his personal opinion- Interview with Nayanar Nagendran
18.3.2023
பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசி உள்ளாரே. அவரது முடிவு பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. பா.ஜனதாவை பொறுத்த வரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம்.
தமிழ்நாட்டில் யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆகவேண்டும்.
கேள்வி: பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளனர். உங்கள் கருத்தை தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்களா?
பதில்: என்னுடைய கருத்தை நான் தான் பிரதிபலிக்க முடியும்.
கேள்வி: எம்.எல்.ஏ.-மேயர் உள்கட்சி பிரச்சினையால் நெல்லை மாநகராட்சி பணிகள் முடங்கி உள்ளதாக கருதுகிறீர்களா?
பதில்: உள்கட்சி பிரச்சினை என்பது எல்லா கட்சியிலும் இருக்கக்கூடியது தான். ஆனாலும் மாநகராட்சியில் எல்லா பணிகளும் தொய்வின்றி நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.